கழுகுமலை - மிதிவண்டிப் பயணம்
03-04-2022 ஞாயிற்றுக் கிழமை. அதிகாலை 5 மணி. கைபேசியில் எழுப்புமணி அலறத் தொடங்கியது. சோம்பலுடன் அதை அணைத்து விட்டு நிம்மதியாக மீண்டும் படுத்து உறங்குவது அல்லது எழுந்து குளித்து மிதிவண்டியில் கிளம்புவது ஆகிய இரு வாய்ப்புகள் எனக்கு இருந்தன. ஒரு விநாடியின் பாதிக்குப் பாதி நேரத்திற்குள் எடுத்த முடிவின்படி எழுந்து குளித்துக் கிளம்பினேன். மிதிவண்டியை ஓட்ட ஆரம்பிக்கும் போது மணி 5.20. சிவகாசியின் கிழக்கே சாத்தூர் சாலை, வடக்கே விருதுநகர் சாலை, மேற்கே ஸ்ரீவில்லிபுத்தூர் சாலை, தெற்கே கழுகுமலை சாலை ஆகியவற்றுள் தெற்கு நோக்கிச் செல்லும் கழுகுமலைச் சாலை தான் காலை மிதிவண்டி ஓட்டுவதற்குச் சிறந்த சாலை என்பேன். சாலை நேர்த்தியாக இருக்கின்றது. அதிக வளைவுகளோ, ஏற்ற இறக்கங்களோ அற்றது. மக்கள் மற்றும் வாகன நடமாட்டமும் மற்ற சாலைகளைக் காட்டிலும் குறைவாகவே இருக்கும். முன்பு ஏற்கனவே சென்று வந்த சாலை என்பதால் சற்று வேகமாகவே சென்றது மிதிவண்டி. வீட்டில் ஏறி மிதிக்க ஆரம்பித்தது தான். மண்குண்டாம்பட்டி, வெம்பக்கோட்டை, துலுக்கன்குறிச்சி, நடுவப்பட்டி, குருவிகுளம் வழியாகச் சரியாக 37.84 கி.மீ. தூரம் பயணித்து கழுகுமலைக் கோவிலின் முன் வண்டியை நிறுத்தும் போது மணி காலை 7.50. சராசரியாக 15 கி.மீ. வேகத்திலேயே சென்றதாலும் அதிகாலை வெயில் இல்லாததாலும் மிகவும் சுகமான பயணமாகவே இருந்தது.
கதலி கமுகுசூழ் வயற்கு ளேயளி யிசையை முரலமா வறத்தில் மீறிய கழுகு மலைமகா நகர்க்குள் மேவிய ...... பெருமாளே.
கழுகுமலை - கதலி, கமுகு ஆகியன வளர்விக்கும் வயல்வெளியும், வண்டுகளின் ரீங்கார ஒலியும் சிறக்க, சிறந்த அறத்தில் மீறிய கழுகுமலை என்று அருணகிரிநாதர் கழுகுமலைத் திருப்புகழில் குறிப்பிடுகின்றார்.
குன்றுக்கும் மலைக்கும் இடைப்பட்ட உயரத்தில் அடிவாரத்தில் புகழ்பெற்ற முருகன் ஆலயமும், உச்சியில் சமணர்கள் படுகையும், வெட்டுவான் கோவிலும் என வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தலம். அடிவாரத்தில் வண்டியை நிறுத்தி விட்டு முருகன் ஆலயத்தினுள் நுழைகின்றேன். அங்கே எளிய முறையில் கிராமத்துத் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவரவர் வசதிக்கேற்ப கோடிகளிலும், லட்சங்களிலும் நடக்கும் நகரத்துத் திருமணங்கள் கந்தன் முன்னிலையில் நடக்கும் இவ்வெளிய திருமணத்திற்கு ஒப்பாமோ என்று நினைத்துக் கொண்டேன். தம்பதியரை மனதுக்குள் வாழ்த்திவிட்டு, அவர்கள் அனைவரும் சென்றதும் ஏகபோகமாய் நீயும் நானுமாய் என கந்தனும் நானும் மட்டுமே அக்கோவிலில் இருந்தோம். கழுகுமலை அடிவாரத்தில் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கும் ஆலயம் அனைவரும் தரிசிக்க வேண்டிய ஒரு ஆலயம். அகிலாண்டேஸ்வரி உடனுறை சிவபெருமானும் அருகிலேயே காட்சி அளிக்கின்றனர். சிறிது நேரம் அமர்ந்து பின்னர் வெளியே வந்தால் பெரிய குரங்குப் பட்டாளம் விளையாடிக் கொண்டிருந்தது. அவை அனைத்திற்கும் வாழைப்பழம் கொடுத்துக் கொண்டிருந்தார் ஒரு சகோதரி. குரங்குகளும் வரிசையாகச் சென்று அவரிடம் வாங்கிச் சாப்பிட்டது காண்பதற்கு இனிமையாக இருந்தது.
வெகுநாட்களாக கழுகுமலை மேலிருக்கும் வெட்டுவான் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக காலை வெயில் ஏற ஆரம்பித்திருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் மலையின் மேற்குப்புறமிருந்த பூங்காவில் மிதிவண்டியை நிறுத்தி விட்டு அங்கிருந்து ஏறுவதற்கு அமைக்கப்பட்ட படிகளின் வழியாக ஏற ஆரம்பித்தேன். கலை மற்றும் சிற்ப ஆர்வலர்களுக்கு அள்ள அள்ளத் தெவிட்டாத அளவுக்கு ஆச்சரியங்களை உள்ளடக்கி எளிமையாக இருக்கின்றது வெட்டுவான் கோவிலும், சமணர் படுகையும், அய்யனார் கோவிலும்.
முன்பு ஏதோவொரு காலத்தில் மேலிருந்து கற்பாறைகள் உருண்டு வித்தியாசமான குகைகளை ஏற்படுத்தியிருக்கக் கூடும். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் சமணர்கள் படுகை உருவாக்கப்பட்டிருப்பதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. மகாநிர்வாணமுற்ற சமண தீர்த்தங்காரர்கள் எட்டு வித சமயச் சின்னங்களுடன் காட்சியளிக்கின்றார்கள். அதிலும் தேவதுந்துபி முழங்க, தேவர்கள் கவரி வீச, மேல், நடு, கீழ் ஆகிய மூன்று உலகங்களையும் தனது ஞானத்தால் வென்றதால் முக்குடைகளையும் கொண்டிருப்பதாக அனைத்துச் சிற்பங்களும் வரிசையாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நன்னூல் சூத்திரத்தின் ஆசிரியரான பவணந்தியாரும், இளங்கோவடிகளும் ஞாபகத்துக்கு வந்து தமிழகம் சமண மதத்திலும் சிறந்து விளங்கியிருந்ததை நிரூபிப்பதாக கழுகுமலைச் சிற்பங்கள் உறுதி செய்கின்றன.
அடுத்ததாக வெட்டுவான் கோவில். அடேங்கப்பா! ஒரு பெரிய மலையை மேலிருந்து கீழே வரை சமுக்கமாக வெட்டி அதன் பின் நடுவிலிருக்கும் ஒரே பாறையைக் குடைந்து அதிலே கோவில் சமைப்பதென்றால் மனிதர்களால் ஆகக் கூடிய காரியமா? அதுவும் எந்த ஒரு இயந்திரமும் இல்லாத காலகட்டத்தில் சாத்தியமா என்னும் கேள்விக்கு விடையாக வெட்டுவான் கோவில் நிற்கின்றது. தென்னகத்து எல்லோரா என்று அழைக்கப்படும் வெட்டுவான் கோவில் சிற்பங்கள் நேரில் நிற்பது போன்ற தோற்றத்தினை உருவாக்குகின்றன. முழுமைப் பெறாமல் இருக்கும் போதே இவ்வளவு சிறப்பாக இருக்கின்றது என்றால் முழுமையான கோவிலாக இருந்தால் எப்படி இருக்குமோ தெரியவில்லை!
இதுவரை இவற்றையெல்லாம் முப்பரிமாணப் புகைப்படம் யாரும் எடுத்தார்களா என்று தெரியவில்லை. இதுவரை யாரும் எடுக்கவில்லையாயின், முதன்முதலாக இவற்றை முப்பரிமாணப் படம் எடுத்தது நானாகத் தானிருக்கும் என்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் எடுத்தேன்.
இவ்விரண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைக் கண்டு பின்னர் மேலிருக்கும் அய்யனார் கோவிலிலும் வணங்கிக் கீழே இறங்கும் போது கதிரவன் தலைக்கு மேலே ஏறி 10 மணியாகி விட்டிருந்தது. திரும்பி வரும் போது வெயிலுக்கு இதமாக சோடா எலுமிச்சை, நன்னாரி சர்பத், இளநீர் என்று உடலுக்கும் தொண்டைக்கும் இதமான பானங்களை அருந்தி வீடு வந்து சேரும் போது மணி மதியம் 1!
இதுபோன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னங்கள் மேநாட்டில் இருந்திருந்தால் எப்படி அரசால் பராமரிக்கப்பட்டிருக்கும் என்பதும், அகில உலகமும் அதைப் புகழ்ந்து மாபெரும் சுற்றுலாத் தலமாகவும் இருந்திருக்கும் என்பதும் நினைத்துப் பார்த்தால் சற்று வருத்தமே மேலிடுகின்றது.