லினக்ஸ் தவழ்ந்து வந்த பாதை

லினக்ஸ் என்னும் ஒற்றை வார்த்தை கணினி உலகத்தின் மொத்த உடலையுமே ஒரு குலுக்கு குலுக்கிப் போட்ட வார்த்தை.

லினக்ஸ் ஒரு சகாப்தம். லினக்ஸ் ஒரு வரலாறு. லினக்ஸ் கணினிப் பாற்கடலில் பலர் கடைந்து வெளிக்கொணர்ந்த அமிர்தம். லினக்ஸ் ஒரு கொள்கை விதையின் விருட்சம். லினக்ஸ் ஒரு நெறிமுறையின் வெற்றி. இன்னும் என்னென்னவோ சொல்லிக் கொண்டே போகலாம்.

இம்மாறுபட்ட உலகில், முக்கியமாக கணினி யுகத்தில், சமதர்ம, சமத்துவ, சமுதாய எழுச்சியைக் கொண்டு வந்தது லினக்ஸ் என்றால் அது மிகையாகாது.

லினக்ஸ் என்றால் என்ன? அதை உருவாக்கியது யார்? கணினி யுகத்தில் அதன் பங்கு என்ன? அப்படி என்ன தான் சாதிக்க முடிந்தது லினக்ஸால்? பெரியோர் முதல் சிறியோர் வரை கணினி உபயோகிப்போர் யாவரும் தன் உதடுகளில் உச்சரிக்கும் படி லினக்ஸ் அப்படி என்ன தான் செய்து விட்டது?

லினக்ஸை உபயோகிப்பவன் என்ற முறையிலும், லினக்ஸை ரசிப்பவன் என்ற முறையிலும், தத்துவார்த்தமாகவும் சரி, அமைப்பு ரீதியாகவும் சரி, மனித குல ஆக்கத்தின் உச்சியைத் தொட்ட ஒரு விஷயத்தை நானும் அனுபவிப்பதன் மூலமும், என்னால் இயன்ற உதவிகளைச் செய்வதன் மூலமும் நம்மாலும் அத்தகைய மனித குல ஆக்கத்தின் உச்சியை அடைய முடியும் என்ற ஆசையிலும் லினக்ஸ் - தவழ்ந்து வந்த பாதை என்னும் இச்சிறு பகுதியை எல்லாம் வல்ல இறையை வணங்கி எழுத ஆரம்பிக்கின்றேன்.

லினக்ஸ் தவழ்ந்து வந்த பாதை எப்படி இருந்தது?

இன்றைய கணிப்பொறிகள் பெரிதிலும் பெரிதாயும், சிறிதிலும் சிறிதாயும் வளர்ந்து கொண்டிருக்கின்றன என்று நாம் அறிவோம். சூப்பர் கணினிகளில் இருந்து இன்று ஒவ்வொருவர் கையிலும் தவழும் அலைபேசி வரை அனைத்துமே கணிப்பொறிகளின் சாம்ராஜ்யமே!

மாபெரும் வழங்கிகளாகட்டும், கையடக்க இன்னிசைக் கருவியாகட்டும், டிவிடியில் இருந்து இயங்கக் கூடிய தொழில்நுட்பமாகட்டும், பென் டிரைவ் எனப்படும் குறு வன் தட்டாகட்டும், பழங்கால பிளாப்பியில் இருந்து இயங்குவதாகட்டும் அல்லது அவற்றை இயக்குவதாகட்டும் அனைத்திலும் தன் கால்களைப் பதித்த அழகிய பென்குயின் பற்றிய கதை இது.

படம்

விக்கிபீடியாவிலிருந்து வலைப்பூக்கள் வரை லினக்ஸ் பற்றி பலரும் எழுதியதைக் காண்கையில் இன்னும் எழுத என்ன இருக்கின்றது என்று தோன்றுகின்றது. இருந்தும், அவை யனைத்தின் தொகுப்பாக, என் வார்த்தைகளில் லினக்ஸ் பற்றித் தரலாம் என்ற எண்ணத்தில் விளைந்ததே லினக்ஸ் - தவழ்ந்து வந்த பாதை.

திரு ராஜா வனஜ் அவர்கள் தன் வலைப்பூவில் இவ்வாறு மணக்க வைக்கின்றார்.

- பணம் இன்றி ஒரு அணுவும் அசையாது.
- இலவசங்களெல்லாம் தரக்குறைவானது / நம்பகத்தன்மையற்றது
- தனிப்பட்ட பொருள் ஆதாயம் இன்றி உற்பத்தி செய்யப் படும் பொருள் மட்டரகமானது
- கூட்டு முயற்சியில் உருவாகும் பொருள் உற்பத்தி என்பது கற்பனையில் தான் சாத்தியம்

இதையெல்லாம் தாண்டி சில விஷயங்கள் உண்டு என்பது லினக்ஸ் GNU/GPL ன் எழுச்சியில் இருந்து நமக்குத் தெளிவாகிறது. மனிதனின் கிரியேட்டிவிட்டி, சிந்தனைவளம், கற்பனைத் திறன் போன்றவை தனிப்பட்ட சுயநலம் என்னும் கூண்டில் இருந்து விடுதலையடையும் போது வியக்கத்தக்க நிகழ்வுகளை நடத்திக் காட்டுகிறது.

...

மதம், மொழி, இனம், சாதி, நாடு என்று பல்வேறு எல்லைகளையும் தடைகளையும் தாண்டி இன்று லினக்ஸ் டெவலப்மென்ட் என்பது சாத்தியமாகியுள்ளது. அத்தனை கட்டுகளையும் கடந்த ஒரு சமுதாயம் சாத்தியமாகியுள்ளதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

...

இன்று சந்தையில் லினக்ஸ் எதிர்கொள்ளும் சவால்கள் கூட வழக்கமான பிற்போக்குத்தனமான அச்சங்களும் தேவையற்ற அய்யங்களும் தான். குறிப்பாக லினக்ஸை யார் சப்போர்ட் செய்வார்கள்? ஏதாவது பிரச்சினை என்றால் யாரிடம் போவது? என்பது மிக முக்கியமான பயம்! இதற்கு சுலபமான பதில்-

நீங்கள் இனியும் ரொம்ப நாட்களுக்கு இன்னொருவன் காலை நக்கிக் கொண்டிருக்க முடியாது. சுயமான அறிவை வளர்த்தே ஆக வேண்டும். இன்று ஈராக் மேலும் ஈரான் மேலும் பொருளாதாரத் தடை போட்டது போல நாளை நம் நாட்டின் மேல் தடை போட்டால் மைக்ரோசாப்டும் சன் மைக்ரோ சிஸ்டமும் கூடாரத்தை காலி செய்து விட்டு போய் விடுவான்கள். அப்போது நீங்கள் யாரிடம் போய் கையேந்தி நிற்பீர்கள்? தொழில்நுட்பத்தில் கூட தன்னிறைவான சூழல் கட்டாயம் தேவை. அதற்கு இதுவும் ஒரு துவக்கம்.. அதுவும் போக இன்று வலையில் இலவசமாகவே இதன் நுணுக்கங்களைச் சொல்லித் தரும் ஆன்லைன் கம்யூனிட்டிகள் உண்டு. பிரச்சினை உங்கள் சோம்பேரித்தனமும் அடுத்தவன் வாயை பார்த்துக் கொண்டு நிற்கும் வழக்கமான அடிமைப் புத்தியும் தான்!

இன்றைக்குக் கல்வி என்பது வயிற்றை நிரப்பிக் கொள்ள வழி சொல்லித் தரும் ஒரு மீடியம் என்றாகி விட்டதால், இந்த அடிமைப் புத்தியில் இருந்து மீண்டெழுவது கொஞ்சம் சவாலான காரியம் தான். கொஞ்சமாவது சிந்திக்கும் திறன் கொண்டவர்கள் இந்தக் காரியத்தை முன்னெடுக்க வேண்டும். இன்று பொருளாதாரம் என்பது கணிணித் தொழில்நுட்பம் சார்ந்து வளர்ந்து வரும் சூழலில் பொருளாதாரத் தன்னிறைவு என்பதும் தொழில்நுட்பத் தன்னிறைவு என்பதும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது.

1991. கணிப்பொறிகளின் வன்பொருட்கள் ஆங்காங்கே தறிகெட்டு பல தரங்களில், அளவுகளில், வேகங்களில் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம். 21ம் நூற்றாண்டு கணினியுகம் என்று தீர்மானித்த அந்த பத்தாண்டுகளின் ஆரம்பம். கணினி சிப்பங்கள், வன் தட்டுகள், நினைவக அட்டைகள், பல்லூடகங்கள், விசைப் பலகையிலிருந்து சுட்(ண்)டெலி வரை அனைத்தும் பல வடிவங்களில், பல அளவுகளில், பல தொழில்நுட்பங்களின் மட்டைகளால் அடிபட்டு, நேர்த்தியான பந்தாக உருமாறிக் கொண்டிருந்த காலகட்டம்.

ஒரு பக்கம் கணிணிகளின் உடல் என்று வர்ணிக்கப்படும் வன்பொருட்கள் வளர்ந்து வந்த வேகத்துக்கு, அவற்றின் உயிர் அல்லது அவற்றின் உயிரை வழிநடத்தும் அறிவு அல்லது மனம் என்று சொல்லப்படும் மென்பொருட்கள் ஈடு கொடுத்தனவா என்றால் அது மிகப்பெரிய கேள்விக் குறியாகவே இருந்தது.

அதற்கு மிக முக்கியக் காரணம் இயங்குதளங்கள். அவை உருவாக்கிய மாபெரும் வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தது கணினி உலகம்.

DOS என்றழைக்கப்பட்ட இயங்குதளம் பில் கேட்ஸால் சந்தைப்படுத்தப்பட்டு புகழுச்சியில் இருந்தது. தனிக்கணினி உபயோகிப்பாளர்கள் (PC) வேறு வாய்ப்பே இன்றி டாஸ் இயங்குதளத்தை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது வேறு இயங்கு தளங்களே இல்லையா? என்று கேட்டால், இருந்தன. ஆப்பிள் மேக் இருந்தது. ஆனால், அதன் விலை மிக அதிகமாக இருந்தது. அனைவரும் பயன்படுத்த முடியாவண்ணம் இருந்தது. மேலும், டாஸ் இயங்கு தளத்தை யாரும் எளிதில் நகலெடுத்து இலவசமாகவே உபயோகப்படுத்த முடியும் என்றிருந்த போது யாரும் ஏன் விலைகொடுத்து வேறு இயங்கு தளத்தை வாங்கப் போகின்றார்கள்?

இன்னொரு உலகமும் இயங்கி வந்தது அதன் பெயர் யுனிக்ஸ். யுனிக்ஸ் இயங்குதளம் பெரிய வழங்கிகள், பெரிய நிறுவனங்களின் கணினிகளில் உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. அது விலைப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த காலமும் உண்டு. அவ்வளவு பெரிய விலைக்கு அஞ்சி தனிக்கணினியாளர்கள் அதன் பக்கம் கூட நெருங்க வில்லை என்பதே உண்மை. இத்தனைக்கும் யுனிக்ஸின் மூல வரிகள் பெல் லேப்ஸின் ஆதரவில் பல பல்கலைக்கழகங்களில் பாடங்களாய் நடத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழ்நிலையில் தான் மினிக்ஸ் (Minix) என்னும் இயங்குதளம் உருவானது. இதை உருவாக்கியவர் Andrew S. Tanenbaum.

படம்

ஆண்டி (Andy) என்று செல்லமாக அழைக்கப்பட்டவரும், ஆம்ஸ்டெர்டாமில் ஒரு பல்கலைக்கழகத்தில் கணினித்துறை விரிவுரையாளராகவும் பணியாற்றிய Andrew S. Tanenbaum, 1987ல் மாணவர்களுக்குக் கற்றுத் தருவதற்காக உருவாக்கிய ஒரு திறப்பு மூல இயங்குதள மென்பொருளே மினிக்ஸ். (Mini-Unix) என்ற பொருள் படும் படி அதன் பெயரை வைத்திருந்தார் அவர். அது அப்போது உலகெங்கும் புழக்கத்தில் இருந்த 8086 சிப்பங்களுக்காக எழுதப்பட்ட மென்பொருள்.

அது ஒன்றும் அத்தனை சிறப்பான இயங்குதளம் அன்று. ஆயினும் அதன் மூல வரிகள் உலகெங்கும் கிடைத்தன. யார் வேண்டுமானாலும் அதன் 12000 வரிகளையும் பெறும் வாய்ப்பு அவரது 'Operating Systems: Design and Implementation' என்னும் புத்தகம் வாயிலாகக் கிடைத்தது. அது மொத்தமும் சி மொழியிலும் அசெம்பிளி மொழியிலும் இருந்தது. அவரது அழகிய சொல்லாற்றலால், கணினித்துறை போகும் பாதை குறித்தும், தன் மென்பொருள் இயங்குதளத்தில் மாற்றங்களை தகுந்த வாறு ஏற்படுத்துவதன் மூலம் என்னவெல்லாம் சாதிக்க இயலும் என்பது குறித்தும் அவர் குறித்து வைத்திருந்த விஷயங்கள் அனைத்தும் அன்றைய கணினித்துறை பயின்ற இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகமும், வழிகாட்டுதலும் தந்தது என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் லினஸ் பெனிடிக்ட் டோர்வல்ட்ஸ் (Linus Benedict Torvalds).

1969, டிசம்பர் 28ம் தேதி ஒரு குளிர்கால இரவில், பின்லாந்தின் ஹெல்சின்க்கியில் திரு நீல்ஸ் டோட்வால்ட்ஸ்க்கும் (Nils Torvalds) திருமதி அன்னா டோர்வால்ட்ஸ்க்கும் (Anna Torvalds) பிறந்தவர் லினஸ்.

ஹெல்சிக்கி பல்கலைக்கழகத்தில் 1988 முதல் 1996 வரை பயின்ற லினஸ், 1991ல் துடிப்பு மிக்க ஒரு இளைஞர். மணல் நிற முடி கொண்ட அந்த அழகு மைந்தர் கணினியில் மென்பொருள் எல்லைகளைத் தொட நினைக்கையில் அவருக்குத் தடையாய் இருந்தது அதன் இயங்கு தள மென்பொருள். மினிக்ஸ் அப்போது புழக்கத்தில் இருந்த போதும் அது ஒரு மாணவர்களின் இயங்குதளமாய் இருந்ததன்றி அதை அனைவரும் முக்கியமாகத் தொழில்துறையில் உபயோகிக்கும் வண்ணம் இல்லை.

இந்தச் சமயத்தில் இன்னொரு பெருந்தகை பற்றியும் குறிப்பிட வேண்டும்.

ரிச்சர்ட் ஸ்டால்மேன் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றது.

படம்

1953ல் மண்ணுக்கு வந்த இவர் (இவரே ஒரு தனி சரித்திரம்!), 1988 வாக்கில் உருவாக்கிய இயக்கம் க்னூ என்று அனைவரும் அழைக்கும் GNU அமைப்பாகும்.

படம்

இது தான் க்னூவின் இலச்சினை!

இதன் நோக்கங்களாவன:

* இலக்கவியல் விடுதலை - Digital freedom
* இலவச மென்பொருள் சித்தாந்தம் - Free software philosophy
* இலவச மென்பொருள் வரையறை - Free Software Definition
* இலவச மென்பொருட்களின் வரலாறு - History of free software

பில்கேட்ஸ் அவர்களால் எழுதப்பட்ட ஒத்த சிந்தனையாளர்களுக்கான திறந்த கடிதமும் இதற்கு ஊக்குவித்தது என்றால் அது மிகையாகாது! மைக்ரோசாப்டின் பேசிக் மென்பொருளைச் சில ஆர்வலர்கள் (70 பேர்!) நகலெடுத்து ஒரு கூட்டத்தின் போது இலவசமாய் பரிமாறிக் கொண்டனர். அதனால் வருத்தமுற்ற கேட்ஸ் அவர்களுக்கு எழுதிய கடிதம் அது! 1976, பிப்ரவரி 3ம் தேதியிட்ட அந்தக் கடிதமும் க்னூ உருவாக ஒரு காரணம் என்பர்!

படம்

இது தமக்கிடப்பட்ட சவாலாகவும் கருதினர் சிலர்! இன்னும் சிலரோ பில்கேட்ஸை இன்னும் வெறுப்படையச் செய்ய இன்னும் பல நகலெடுத்தனர் என்பதும் உண்மை!

நாம் ஏன் மைக்ரோசாப்டின் அல்லது எந்த ஒரு நிறுவனத்தின் மென்பொருளையும் சார்ந்திருக்க வேண்டும்? இலவசமாகவே ஒரு இயங்குதளம் இருந்தால் யாரிடமும் இப்படி பேச்சு வாங்க வேண்டியதில்லையே என்று எண்ணிய ரிச்சர்ட் ஸ்டால்மேன், க்னூ
இயங்குதளம் என்ற பெயரில் இயங்குதளம் அமைக்கக் கனவு கொண்டார். 1983லேயே இயக்கமும் ஆரம்பித்தார்!

GNU என்பதன் விரிவாக்கம் (GNU is NOT Unix) ஆகும்!

இத்திட்டம் யுனிக்ஸ் இயக்குதளத்தை ஒத்த திறந்த ஆணைமூல இயக்குதளம் ஒன்றினை உருவாக்குதலை நோக்கமாக கொண்டிருந்தது.

இயக்கம் ஆரம்பித்ததோடு நில்லாமல் GCC (சி மொழி தொகுப்பி) என்னும் மிக அருமையான மென்பொருள் எழுதி அதை இன்னும் பயன்படத்தக்க வகையில் அப்போதே எழுதியிருப்பது ஆச்சரியமே!

1990ல் க்னூ செயல் திட்டம் ஏறத்தாழ நிறைவடையும் நிலையை அண்மித்தது. ஓர் இயக்குதளத்துக்கு தேவையான செயலிகள், காம்பைலர்கள், உரைத்தொகுப்பிகள், யுனிக்சை ஒத்த ஆணைமுகப்பு (command shell) போன்றவை அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. மிக அடிப்படை நிலையில் இருக்கும் கரு (கருனி) ( kernel) ஒன்றை உருவாக்கும் பணி மட்டுமே முற்றுப்பெறவில்லை. அப்போது GNU Hurd என்ற கரு (கருனி) வடிவமைக்கப்பட்டவண்ணமிருந்தாலும், அது போதாததாகவே உணரப்பட்டது.

ரிச்சர்டின் தத்துவம் என்னவென்றால், ஒரு மென்பொருள் இலவசமாகப் பகிர்ந்து கொள்ளத்தக்கதாகவும், நகலெடுக்கத்தக்கதாகவும் இருந்தால் மட்டுமே அதிலிருந்து சிறப்பான செயல்பாடுகளைப் பெற முடியும் என்பதே அது.

1991ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 25ம் தேதி வரலாற்றுச் சிறப்பு மிக்க கீழ்க்கண்ட பதிவு, மினிக்ஸ் செய்திக்குழுமத்துக்கு லினஸால் பதியப்பெற்றது.


From: torvalds@klaava.Helsinki.FI (Linus Benedict Torvalds)
Newsgroups: comp.os.minix
Subject: What would you like to see most in minix?
Summary: small poll for my new operating system
Message-ID: <1991Aug25.205708.9541@klaava.Helsinki.FI>
Date: 25 Aug 91 20:57:08 GMT
Organization: University of Helsinki

Hello everybody out there using minix -
I'm doing a (free) operating system (just a hobby, won't be big and
professional like gnu) for 386(486) AT clones. This has been brewing
since april, and is starting to get ready.I'd like any feedback on
things people like/dislike in minix, as my OS resembles it somewhat
(same physical layout of the file-system(due to practical reasons)
among other things). I've currently ported bash(1.08) and gcc(1.40),and
things seem to work.This implies that I'll get something practical within a
few months, andI'd like to know what features most people would want. Any
suggestions are welcome, but I won't promise I'll implement them :-)
Linus (torvalds@kruuna.helsinki.fi)
PS. Yes - it's free of any minix code, and it has a multi-threaded fs.
It is NOT protable (uses 386 task switching etc), and it probably never
will support anything other than AT-harddisks, as that's
all I have :-(.

தான் மினிக்ஸ் போன்றே, மினிக்ஸ் மூல வரிகளின்றி, GCC மொழியில் தொகுக்கக்கூடிய ஒரு இலவச இயங்குதளத்தை உருவாககிக் கொண்டிருப்பதாகவும் கூடிய விரைவில் வெளியிடப் போவதாகவும் இந்த உலகுக்கு அறிவித்த அற்புதப் பதிவு இது!

இந்தப் பதிவிலிருந்து என்ன தெரிகின்றது? லினஸுக்கே அவரது புதிய இயங்குதளத்தில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்று தானே?

அது சரி. இத்தனை தன்னடக்கமாய் கைகளைக் கட்டிக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கும் மனிதரிடமிருந்து வேறெப்படி கடிதம் வந்திருக்கக் கூடும்?

படம்

அதற்கடுத்த மாதத்தில் அவரே பதிவிட்ட வரலாற்றுப் பதிவு இது.


From: torvalds@klaava.Helsinki.FI (Linus Benedict Torvalds)
Newsgroups: comp.os.minix
Subject: Free minix-like kernel sources for 386-AT
Message-ID: <1991Oct5.054106.4647@klaava.Helsinki.FI>
Date: 5 Oct 91 05:41:06 GMT
Organization: University of Helsinki
Do you pine for the nice days of minix-1.1, when men were men and wrote their own device drivers?
Are you without a nice project and just dying to cut your teeth on a OS you can try to modify for your
needs? Are you finding it frustrating when everything works on minix? No more all-nighters to get a nifty program working? Then this post might be just for you :-)
As I mentioned a month(?)ago, I'm working on a free version of a minix-lookalike for AT-386 computers. It has
finally reached the stage where it's even usable (though may not be depending on
what you want), and I am willing to put out the sources for wider distribution. It is just version 0.02 (+1 (very
small) patch already), but I've successfully run bash/gcc/gnu-make/gnu-sed/compress etc under it.
Sources for this pet project of mine can be found at nic.funet.fi (128.214.6.100) in the directory /pub/OS/Linux.
The directory also contains some README-file and a couple of binaries to work under linux
(bash, update and gcc, what more can you ask for :-). Full kernel source is provided, as no minix code has been
used. Library sources are only partially free, so that cannot be distributed currently. The system is able to compile
"as-is" and has been known to work. Heh. Sources to the binaries (bash and gcc) can be found at the
same place in /pub/gnu.

அதில் தன் இலவச குறு இயங்குதளத்துக்கு அவர் இட்ட பெயர் தான் லினக்ஸ். அந்தச் சிறிய விதை வேரூன்றி உலகெங்கிலும் தன் அகலமான விழுதினை ஆழமாகப் பதிக்கும் ஆலமரமாக மாறும் என்றாவது நினைத்திருப்பாரா லினஸ் அப்போது?

நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம்.

அடுத்த சில வாரங்களிலேயே லினக்ஸ் 0.03 பதிப்பு வெளியாயிற்று. டிசம்பர் மாத்திலேயே (இரண்டே மாதங்களில்) 0.10 பதிப்பு வெளி வந்தது. இருந்த போதிலும் லினக்ஸ் அடிப்படை வடிவிலேயே இருந்து வந்தது. அப்போதைய AT வன் தட்டில் மட்டுமே இயங்க முடிந்தது ஒரு குறைபாடாக இருந்தது. 0.11 பதிப்பு பல மொழிகளுக்கான வசதி, பிளாப்பி டிரைவர் மென்பொருள், நவீன திரை உத்திகள் (VGA,EGA,HGA) ஆகியவற்றைக் கொண்டிருந்த்து.

0.12 என்றிருந்த பதிப்பு எண், மாயாஜாலம் போல் 0.95 மற்றும் 0.96 என்று மாறி கூடிய விரைவில் உலகெங்கும் பிரதியெடுக்கப்பட்டு பறந்தது!

துரோணர் ஏகலைவனைக் கடிதம் மூலம் சந்திக்கும் வாய்ப்பும் அமைந்தது. ஆண்டி லினஸுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்!


"I still maintain the point that designing a monolithic kernel in 1991 is a fundamental error. Be thankful you are not my student. You would not get a high grade for such a design :-)"
(Andrew Tanenbaum to Linus Torvalds)

அதில், "நீங்கள் என்னுடைய மாணாக்கனாக இல்லாதிருந்தது ஒரு வகையில் நல்லதே. அனைத்து விஷயங்களும் பொருந்திய இத்தகைய ஒரு கரு மென்பொருளைக் கொள்கையளவில் கூட என் மனம் ஏற்றுக் கொள்ளாது. என்னிடம் படித்திருந்தால் நீங்கள் தேர்வடைந்திருக்க மாட்டீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்! மேலும் "லினக்ஸ் பழைமையானது. புதுமையில்லாதது" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அது லினஸுக்கு மனத்தளர்வை ஏற்படுத்தியிருக்கக் கூடும்! அவர் சாதாரணமான மாணவராய் இருந்தால்!

ஆனால், தான் கொண்ட லட்சியத்தில் உறுதியாயிருந்த லினஸ் கூடிய விரைவிலேயே தனது கூட்டமைப்பின் சாதனையால் நிரூபித்தார்.

பதிலடியும் கொடுத்தார்!


Your job is being a professor and researcher: That's one hell of a good excuse for some of the brain-damages of minix.
(Linus Torvalds to Andrew Tanenbaum)

மினிக்ஸின் பல குறைபாடுகளுக்கு நீங்கள் விரிவுரையாளராகவும், ஆராய்ச்சியாளராகவும் இருப்பதே மன்னிக்கத்தக்கதாகிவிட்டது என்ற பொருள் படும் படி எழுதியிருந்தார்.

சரி, அதையெல்லாம் விடுவோம்!

முதலில் லினக்ஸ் கூடாரத்தில் நூறு பேர் இணைந்தனர். பின் ஆயிரமாயினர். பின் லட்சங்களாயினர்!

இன்னும் என்னென்னவெல்லாம் நடந்தது? கொஞ்சம் கொஞ்சமாய்க் காண்போம்!

லினஸ் எத்தனை எளிமையானவர் என்பதைக் காண அவரது வலைத்தளத்துக்குச் சென்று காண்போமா?

இங்கே வந்து பாருங்கள்.

இயங்குதளம் என்றால் என்ன? அது ஏன் தேவை என்ற கேள்வி இங்கு வரக்கூடும்.

ஒரு கணினியில் இயங்குதளமானது குறைந்தபட்சம் கீழ்க்கண்ட பணிகளை இணைந்து செய்ய வேண்டும். பெயருக்கேற்றாற்போல் கணினி வெற்றிகரமாக இயங்குவதற்குப் போடப்பட்ட ஒரு தளமாக இருக்க வேண்டும். மென்பொருள், பயனர், வன்பொருள் ஆகியவற்றை இணைக்கும் பாலமாகவும் இருக்க வேண்டும்.

சரி, ஒரு இயங்குதளம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

1. செயல் நிர்வாகம் (Process Management) -

இயங்குதளமானது ஒரு கணினியின் செயல்பாடுகளைத் திறம்பட நிர்வாகம் செய்ய வேண்டும். ஒரு கணினி பல செயல்கள் செய்ய வேண்டிய கருவியாகும். (உ-ம்: திரையில் செய்தி காட்டுதல், விசைப்பலகையிலிருந்து உள்ளீடு பெறுதல், வன் தட்டிலிருந்து தகவல் கொணர்தல், அல்லது சேமித்தல்). இச்செயல்களில் எவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும், (Preference) எவற்றைப் பின்புலத்திலேயே தொடரச் செய்யலாம் (Background process) என்றெல்லாம் தீர்மானிக்க வேண்டியது ஒரு இயங்குதளத்தின் கடமை.

இது தவிர, ஒரு பயனர் ஒரே நேரத்தில் பல செயலிகளைத் துவக்கி இருக்கலாம். அவற்றையும் திறம்பட நிர்வகிக்க வேண்டியது ஒரு இயங்குதளம். தற்போது வரும் கணினிகள் இரண்டுக்கும் மேற்பட்ட மையச் செயற் சிப்பங்களைக் கொண்டுள்ளது (CPU). இவை ஒரே நேரத்தில் வெவ்வேறு செயல்கள் செய்யத் தக்கவை. அவற்றிற்குத் தேவையான கட்டளைகளைத் தரும் வல்லமை இயங்குதளத்திற்கு இருக்க வேண்டும்.

2. நினைவக மேலாண்மை:

கணினியில் இருவகை நினைவகங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. மின்சாரத்தைத் துண்டித்ததும் மறந்த் விடும் அடிப்படை நினைவகத்தில் தான் அனைத்து மென்பொருள் கட்டளைகளும், அவை கணக்கிட உதவும் தகவல்களும் வசதியாக வைத்து அனைத்து வன்பொருட்களுக்கும் பரிமாறப்படுகின்றன. அவை சரியான முறையில் சரியான வன்பொருட்களுக்குச் செல்கின்றனவா என்று நிர்வகிக்க வேண்டியது இயங்குதளத்தின் கடமையாகும்.

வன் தட்டு, மென் தட்டு (பிளாப்பி), குறுந்தட்டு, பேனா நினைவகங்கள் என இருக்கும் இரண்டாம் கட்ட நினைவகங்களில் இருந்தும், தேவையான தகவல்களைத் தேவையான நேரத்தில் எடுக்கவும், அதைச் சரியாக மீண்டும் சேமிக்கவும் இயங்குதளம் உதவ வேண்டும். உதாரணமாக, நாம் ஒரு பெரிய படத்தை வரைந்து கொண்டே, ஒரு புதிய திரைப்படப் பாடலும் கேட்டுக் கொண்டிருக்கலாம். பாடல் பாடச்செய்யும் மென்பொருளுக்கு இசைக் கோப்பும், படம் வரையும் மென்பொருளுக்கு படம் சம்பந்தப்பட்ட கோப்பும் அனுப்பப்படவேண்டும்! மாற்றி அனுப்பினால் என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள்!

மொத்த அடிப்படை நினைவகம் மிகக் குறைவாகவே இருக்கும். காரணம் அது வேகமாக இருக்க வேண்டும். வேகமாக வேகமாக செலவும் அதிகரிக்கும். எனவே, அடிப்படை நினைவகம் மொத்த வன் தட்டு நினைவகத்தைக் காட்டிலும் மிகக் குறைவாகவே இருக்கும். எனவே தேவைப்படும் போதெல்லாம் மாற்று நினைவகம் (Swap Memory) வன் தட்டில் இருந்து எடுத்து உபயோகிக்கும் திறமான மாய நினைவகம் (Virtual Memory) என்றழைக்கப்படும் தொழில்நுட்பத்தையும் இயங்குதளம் கொண்டிருக்க வேண்டும்.

3. கோப்பு அமைப்பு:

0,1 இவற்றின் அடிப்படையிலேயே கட்டளைகளும், தகவல்களும் கணினியில் இயங்குகின்றன என்பது நாம் அறிந்ததே. அவற்றை முறைப்படுத்திச் சேமிக்க கோப்பு அமைப்பு (File systems) சிறந்த முறையில் இருந்தால் தான் ஒரு இயங்குதளம் தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் கோப்பை செம்மையாக எடுத்துத் தர ஏதுவாக இருக்கும். இதுவும் ஒரு முக்கியமான பணியாகும்.

4. வன்பொருட்கள் நிர்வாகம்:

இது ஒரு சவால்கள் நிறைந்த பணியாகும். தற்போது கணினியில் எதைத் தான் இணைக்கலாம் என்ற வரையறை இல்லாமல் போயிற்று. இன்னும் சில காலத்தில் முடி காய வைக்கும் கருவிக்குக் கூட USB செருகி வந்து விடக் கூடும்! காலத்துக்குத் தக்கவாறு குளிர்ந்த காற்றோ, சூடான காற்றோ வரவைக்கக் கூடும்.

ஒலி வாங்கி, ஒலி பெருக்கி, வலையமைப்பு இடைமுக அட்டை, சமிக்ஞை மாற்றி (modem), மனிதரிடைமுகக் கருவிகள் (Human Interface Devices), கம்பியில்லாத் தொழில்நுட்ப வன்பொருட்கள், சுட்டெலிகள், விளையாட்டுக் குச்சிகள் (Joy stick), அச்சிடும் இயந்திரங்கள், புகைப்படக் கருவிகள், அசைபடக் கருவிகள், இசையமைப்புக் கருவிகள், இசை சேமிக்கும் கருவிகள், அலைபேசிகள், படம் வருடிகள், தொடுதிரைகள் என்று நான் இங்கு பட்டியலிட்டிருப்பது பத்து சதவீதம் கூட இருக்காது.

யூ.எஸ்.பி. வழியாக அதிகபட்சம் 256 வகையான கருவிகளை இணைக்கலாமாம். இன்னும் தீக்கம்பி (Firewire) முறைகளின் மூலமெல்லாம் இன்னும் அதிகமான கருவிகளை இணைக்க முடியும் என்று நினைக்கின்றேன்.

நிற்க.

இவையனைத்தையும் செருகியவுடன், இது இந்தக் கருவி தான். இந்தப் பயன்பாட்டுக்காகத் தான் செருகப்பட்டிருக்கின்றது என்று உடனே இயங்குதளம் கண்டறிந்து செயல்படவேண்டும். என்ன தான் 0,1 மூலமே தகவல்களை அனுப்பிப் பெற்றாலும், அவற்றின் தொழில்நுட்பத்துக்குத் தக்கவாறு கருவி வகையமைப்பு (Device Driver) இருக்க வேண்டும். அப்போது தான் இயங்குதளமானது அதன் மூலமாக தொழில்நுட்பப் புதுமைகளை ஏற்றுக் கொள்ள இயலும்.

5. பயனர் இடைமுகம்: (User Interface)

பயனர் இடைமுகம் என்பது மிக முக்கியமான ஒரு பணியாகும். இடைமுகம் என்பது வன்பொருள் மற்றும் மென்பொருளுக்கும் பயனருக்கும் இடையே செயல்படும் பாலமாகும்.

முன்பெல்லாம் பயனர் இடைமுகம் வெறும் வார்த்தைகளாகத் தட்டச்சு செய்து உள்ளீடு செய்யவும், திரையில் வெளிச்சப் புள்ளிகளில் எழுத்துக்களைக் காட்டியும் இருந்து வந்தது. (Text Based)

பின்பு சித்திரப் பயனர் இடைமுகம் (Graphical User Interface) வந்த பின்னர், சுட்டெலி மூலம் எளிதில் சிறு படங்களைச் சொடுக்கித் தங்கள் வேலைகளைச் செய்ய முடிந்தது. மேலும், எழுத்துக்கள் மட்டுமின்றி, வரைபடங்கள், அசைபடங்கள், இசை என்று அனைத்தின் மூலமும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஆச்சரியப் பெட்டியாகக் கணினி மாற முடிந்தது.

எனவே ஒரு இயங்குதளமானது இவ்விரண்டு (எழுத்து மற்றும் சித்திர) பயனர் இடைமுகத்திலும் பயனருக்கு எளிமையாக இருந்தால் அது வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை தானே?

6. பாதுகாப்பு மேலாண்மை: (Security Management)

இதைப்பற்றி எழுதிக் கொண்டே போகலாம்! உங்களுக்கே அலுத்துப் போகும். வைரஸுகளில் இருந்து, மின் வெட்டு வரை ஏற்படும் பிரச்னைகளால், உங்களின் விலைமதிப்பில்லாத தகவல்களில் இருந்து கணினி செயல்படும் வன் பொருட்கள் வரை எதுவும் பாதிக்கப்படக் கூடும். அவற்றிற்குப் பாதுகாப்பு வழங்கும் காவலனாக ஒரு நல்ல இயங்குதளம் பணி புரிய வேண்டும்.

பயனர் நிர்வாகம் சிறப்பாகச் செய்ய வேண்டும். ஒரு இயங்குதளம், ஒரே மூலாதாரத்தைப் (Resource) பலர் பகிர்ந்து கொள்ளும் இந்தக் கால கட்டத்தில் பயனர் அனுமதி, கோப்பு அனுமதி, மூலாதார அனுமதி ஆகியனவற்றைக் கொள்கை ரீதியாக திறம்படச் செய்ய வேண்டும். அப்போது தான் பாதுகாப்பு ஸ்திரப்படுத்தப்படும்.

7. மென்பொருள் செயல் படுத்தும் திறன், வேகம், சக்தி சிக்கனம், கை தூக்கி விடுதல், சாரதி போன்ற பல்வேறு இதரப் பணிகள்:

இயங்குதளம் இத்தனையும் செய்தாலும், ஒரு பயனருக்குத் தேவையான அனைத்து மென்பொருட்களையும் இயங்க வைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். உதாரணமாக இன்றைய காலகட்டத்தில், சாதாரண கூட்டல் கழித்தல் கணக்கிலிருந்து, விண்கலம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது வரை மென்பொருட்கள் இருக்கின்றன. ஏன்? ஒரு விமானத்தைப் பார்க்காமலேயே, விமானம் ஓட்டுவது எப்படி என்று பழகிக் கொடுக்கும் ஊக்கி (Simulation) மென்பொருட்கள் இருக்கின்றன. இப்படி எல்லா மென்பொருட்களும் இயங்க வேண்டும்.

பின்புல தகவல் தள வழங்கி (Back end database server), இணைய வழங்கி என்று இன்னும் பல மென்பொருட்கள் இருக்கின்றன. அவையும் இயங்க வேண்டும்.

அடுத்ததாக வேகம். மேற்கண்ட அனைத்தும் கண்மூடிக் கண் திறப்பதற்குள் முடிக்க இயங்குதளம் துணை நிற்க வேண்டும். இல்லையென்றால் கணினி மூலம் செய்வதில் அர்த்தமே இல்லை தானே?

சக்தி சிக்கனம்: Power Management இன்று பலரும் மடிக்கணினி உபயோகிக்கின்றோம். அவற்றின் சக்தியைச் சிக்கனமாய்ச் செலவழிப்பதிலும் இயங்குதளம் துணை நிற்க வேண்டும்.

கைதூக்கி விடுதல் - Backward Compatibility - நாம் ஏற்கனவே பழைய கணினி வைத்திருக்கக் கூடும். அவற்றில் பழைய இயங்குதளமும் இயங்கக் கூடும். இப்போது ஒரு புதிய இயங்குதளம் நிறுவினாலும் கூட, அவற்றில் இருக்கும் தகவல்களை உபயோகப்படுத்திக் கொள்வதாக இருந்தால் தான் வேலை மிச்சமாகும். எனவே அதற்கும் இயங்குதளம் உதவி புரிய வேண்டும். மேலும் இயங்குதளத்தில் புதிய வசதிகள் இணைத்தாலும் அவற்றையும் சீரிய முறையில் ஏற்றிக் கொள்ள (Upgrade) இயங்குதளம் இடம் தரவேண்டும்.

சாரதி!? ஆம், ஒரு இயங்குதளம் அத்தனை பாரத்தையும் சுமக்கும் கழுதை தான்! அது தான் அனைத்தையும் கட்டி இழுக்க வேண்டும்! பயனர் ஒய்யாரமாகப் பவனி வர உதவும் சாரதியாக இயங்குதளம் இருக்க வேண்டும்.

இப்போதே மூச்சை முட்டுகின்றது தானே! இன்னும் பலப்பல செயல்கள் இருக்கின்றன! இவையனைத்தும் இசைந்து செய்வதே ஒரு இயங்குதளமாகும்!

சரி. இயங்குதளம் மட்டும் உருவாக்கினால் போதுமா? ஒரு இயங்குதளத்துக்குரிய மேலே சொன்ன அத்தனை பண்புகளும், குண நலன்களும் லினக்ஸிடம் இருக்கின்றதா? அவ்வாறு இருந்தால் தானே அதை அனைவரும் உபயோகிக்க இயலும்? என்ற கேள்விகள் உங்களை மொய்ப்பது தெரிகின்றது.

ஒரு வயல்வெளியைப் பார்க்கின்றீர்கள். எத்தனை அழகாய் இருக்கின்றது? வரிசை வரிசையாய் நாற்றுக்கள். உரமிடப்பட்டு, வாய்க்கால் வெட்டி ஒவ்வொரு நாற்றுக்கும் அறிவியல் முறையில் நீர் பாய்ச்சப்பட்டு, களைகள் எடுக்கப்பட்டு எத்தனை நேர்த்தியாக விவசாயம் நடக்கின்றது? நாம் உண்ணும் அரிசி, கோதுமை முதல் காய்கறிகள் அனைத்தும் வயல்வெளியிலிருந்தே நமக்குக் கிடைக்கின்றன. மாடுகள், ஆடுகள், நாய்கள் போன்ற வீட்டு விலங்குகளே உபயோகப்படுத்தப் படுகின்றன.

இப்போது ஒரு வனாந்திரப்பகுதியைக் காணுங்கள். ஒவ்வொரு செடி கொடியும் இஷ்டத்திற்கு என்னவென்றோ எதற்கென்றோ தெரியாமல் கன்னா பின்னாவென்று பின்னிப் பிணைந்து, சூரிய வெளிச்சமே ஊடுருவ முடியாத படி வளர்கின்றன. எங்கு காணினும் பசுமையாய் இருக்கின்றது. தண்மையாகவும் இருக்கின்றது. அங்கு கிடைக்கும் கனிகள் இயல்பிலேயே ருசிக்கின்றன. பலவித மூலிகைகளும் கிடைக்கின்றன. குரங்கு, மான் முதல் அனைத்து வனவிலங்குகளும் அங்கே இருக்க இடம் கிடைக்கின்றது.

என்ன இது? லினக்ஸ் கதையா அல்லது விவசாய முறையா என்று கேட்கின்றீர்கள் தானே?

இதில் வயல்வெளி என்பது, முறையான நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில், திறமை வாய்ந்த மென்பொருள் வல்லுநர்களைக் கொண்டு, நேர்த்தியான முறையில், முன்கூட்டியே இது தான் தரப்போகின்றோம் என்று திட்டமிட்டு, ஒவ்வொருவருக்கும் தேவையான ஊட்டச்சத்தை(!)க் கொடுத்து மென்பொருள் உருவாக்குவது போல! பலர் அதன் மூலம் பயனடைகின்றார்கள். கிட்டத்தட்ட அனைவருமே எனலாம்!

இனி, வனாந்திரம் அல்லது காடு என்பது பலவித மென்பொருளாளர்களும், வன்பொருளாளர்களும், மாணவர்களும், பல நிறுவனங்களைச் சார்ந்தவர்களும், ஏன் பொதுமக்களும் கூட தங்கள் பங்களிப்பை ஒரு கட்டமைப்பின்றி வழங்கி, அதன் மூலம் பயன்பெறும் திறப்பு மூல நிரலிகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அங்கும் கனிவகைகள், மூலிகைகள் என்று பல கிடைக்கக் கூடும்! ஏற்கனவே சொன்னது போல் குரங்குகள் முதல் மான் வரை வனவிலங்குகள் (!

:)

) இருக்கக் கூடும்!

சரி, இரண்டிலும் தேவையான அளவு நம்மால் பலன் பெற இயலும் தானே!?

இனி மீண்டும் லினக்ஸுக்கு வருகின்றேன்.

லினக்ஸில் பங்கு பெற்றவர்கள் அனைவருமே சுயநலத்தை விட்டொழித்த முனிவர்கள் என்று சொல்வதற்கில்லை. ஹேக்கர்கள் (சரியான தமிழ்ப்பதம் தேடிக் கொண்டிருக்கின்றேன்!) என்றழைக்கப்படும் தெனாவட்டுக்காரர்கள், தன்னிச்சை ஆர்வலர்கள் ஆகியோர்கள் தான்.

உலகில் எப்போதுமே ஒரு பொருளை மூடிவைக்க வைக்க அதன் மவுசு கூடிக் கொண்டே போகும்! எதைப் பார்க்காதே என்று சொல்கின்றோமோ அதைத் தான் பார்க்கவேண்டும் என்று துடிக்கும் இளைஞர் கூட்டம். எதைச் செய்யாதே என்கின்றோமோ, அதைச் செய்தால் என்ன? என்று இளைஞர்களுக்குத் தோன்றுவது சகஜம், இயற்கை என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்.

EULA என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது End User License Agreement என்பது அதன் விரிவாக்கம் ஆகும்! சாதாரணமாக மைக்ரோசாப்ட் மென்பொருட்கள் எதை நிறுவ முயற்சித்தாலும் முதலில் வருவது இது தான்! எதையுமே வாசித்துப் பார்க்காமல், கீழே சரியென்று குறியிட்டு ஒத்துக் கொள்வோமே (Accept) அது தான் EULA. அதை முதன் முதலில் வெற்றிகரமாய் சாதித்துக் காட்டியது மைக்ரோசாப்ட் எனலாம். அதாவது நீங்கள் மென்பொருளை அவர்களிடம் வாங்கவில்லை. அதன் உபயோகப்படுத்தும் உரிமை மட்டுமே வாங்குகின்றீர்கள். எந்த நேரத்திலும் அதைப் பறித்துக் கொள்ளும் உரிமை மென்பொருள் நிறுவனத்துக்கு உண்டு. உங்கள் பதிப்பை நீங்கள் வாங்கிவிட்டதால் அதில் என்ன வேண்டுமென்றாலும் செய்து விட முடியாது. உதாரணத்துக்கு பின்பொறி (Reverse Engineering) செய்ய முடியாது.

எதையும் செய்யாதே என்றால் தான் செய்யத் துடித்திருப்போமே நம்மாட்கள். எனவே அதை உண்டு இல்லை என்று சின்னாபின்னப் படுத்திப் பார்ப்பதில் இளைஞர்களுக்குக் கொள்ளை ஆசை! சில சமயங்களில் இத்தகைய இளைஞர்களை மென்பொருள் நிர்வாகமே தம் ஓட்டைகளைக் கண்டறிய இவர்களை வேலைக்கமர்த்துவது சகஜமாகும். இவர்களை நேர்மையான கொள்ளைக்காரர்கள் (Ethical Hackers) என்பார்கள்!

அந்நாளில் (1991 வாக்கில்) இளவட்டங்கள் பலர் இணைய தளங்கள் பலவற்றின் பாதுகாப்பு நடவடிக்கை, பெட்டகங்களைத் திறந்து பார்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர். அதற்கென்று அவர்களுக்கு இயங்குதள மென்பொருள் தேவைப்பட்டது. அந்த மென்பொருளை லினக்ஸ் வழங்கியது என்றால் அது மிகையாகாது! அதன் மூலம் ஹேக் செய்யலாம் என்றதும், அனைவரும் அதன் மூலம் ஹேக் செய்ததுடன், அனைவரும் அதன் ரசிகர்களாய் மாறினர்! ரசிகர்களே இயக்குநர்களானால் எப்படி இருக்கும்?! அப்படித் தான் ஆகிவிட்டது லினக்ஸின் தலைவிதி!

சரி, அப்படியானால், கொள்ளைக்காரர்களின் கைவண்ணம் தான் லினக்ஸா? அதை நம்ப முடியுமா? காவல்காரர்களையே நம்ப முடியாத இந்தக் காலத்தில், கொள்ளைக் காரர்களை நம்பி நம்மால் எப்படி இ(ய)றங்க முடியும்?

பலப்பல கேள்விகள். பதில்கள் உண்டா லினக்ஸில்? தேடுவோம் தொடர்ந்து.

ஏற்கனவே பார்த்தது போல் ஒரு இயங்கு தளம் வெற்றியடைய வேண்டுமானால் அதில் இயங்கும் மென்பொருட்களும் வெற்றிகரமாக இயங்க அது ஒத்துழைக்க வேண்டும். உதாரணமாக இயங்குதளம் நன்றாக இருந்து அதில் இயங்கும் அலுவலக மென்பொருட்கள் சரியில்லை என்றால் அதன் பாதிப்பு இயங்குதளத்தின் சந்தையிலும் ஏற்படும்.

லினக்ஸ் கூட்டுறவில் தயாரான ஒரு இயங்குதளம். திறப்பு மூல முறையைக் கொண்டது. சரி, இந்த உரிமை முறை அத்தனை எளிதானதா என்றால், சிக்கலில் மைக்ரோசாப்டின் EULA உரிமத்துக்குக் கொஞ்சமும் குறைவில்லை என்றே சொல்லலாம்.

அட, இலவசமாய் மூல நிரல்களைத் தருவதிலும் குழப்படியா? என்று நீங்கள் கேட்பது காதில் விழுகின்றது.

GPL எனப்படும் General Public Licence முறை தான் GNU வால் அங்கீகரிக்கப்பட்டதாகும். அந்த உரிமைப்படி, நீங்கள் திறப்பு மூலத்தை நினைத்த படியெல்லாம் உபயோகப்படுத்தி விட முடியாது. என்ன இது? பின்னே எதற்கு அந்த உரிமை? என்கின்றீர்கள் தானே?

ஒரு தனி மனித சுதந்திரம் என்பது, உங்களுக்கு கை நீட்டிக் கொள்ள இடம் அளிப்பது தான். ஆனால், அது மற்றொருவரின் மூக்கின் நுனியை இடித்து விடக் கூடாது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அது போல இங்கே திறப்பு மூல நிரலி முறை சரியாக இயங்க வேண்டுமானால், நீங்கள் எந்த வகையில் அந்த உரிமையைப் பெற்றீர்களோ, அதே உரிமை உங்களிடம் இருந்து பெறுபவரும் பெற்றிருக்க வேண்டும். இதன் பெயர் Copyleft (Copyright ன் எதிர்ப்பதம்!). எடுத்துக்காட்டாக, திறப்பு மூல உரிமை மூலம் மூல வரிகளைப் பெற்று ஒரு மென்பொருள் நீங்கள் உங்கள் வரிகளையும் அதில் சேர்த்து உருவாக்குகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த மென்பொருளை நீங்கள் விற்கலாம் தவறில்லை. ஆனால், உங்கள் மூலவரிகளையும் சேர்த்தே தரவேண்டும். அதாவது நீங்கள் எந்த வகையில் உரிமை பெற்றீர்களோ, அதே உரிமை உங்களிடம் இருந்து பெறுபவரும் பெற வேண்டுமே.

இனி, இந்த உரிமை வேண்டாம் என்று நினைப்போரும் பலர் உண்டு. அதாவது பலரின் சரக்கை உபயோகித்தாலும், எனது விலைமதிப்பற்ற சொந்தச் சரக்கும் அதில் உள்ளது. எனவே, அதை எப்படி என்னால் தாரை வார்க்க இயலும்? என்று கேட்பவர்களும் இருப்பதால், வேறு பல உரிமங்களும் உண்டாயின.

உதாரணமாக BSD, LGPL,MIT ஆகிய இலவச உரிமை முறைகள் போக இருமுக உரிம முறை (Dual Licensing)யும் உண்டு. அதாவது ஒரே மென்பொருள் இலவசமாகவும் கிடைக்கும், விலைகொடுத்தும் வாங்கலாம். விலைகொடுத்து வாங்கினால் விற்பனைக்குப் பின் நிறைய சேவைகள் கிடைக்கும்.

நான் ஒன்றும் மென்பொருள் உருவாக்கும் பொறியாளர் இல்லை. எனக்குத் தேவை இலவச மென்பொருள். அது திறப்பு மூலத்துடன் வந்தாலும் என்னால் அதில் ஒன்றும் மாற்ற இயலாது. அதில் எழுதி இருப்பதை மாற்றும் அளவிற்குத் தெரிந்திருந்தால், அப்படி மாற்றுவதற்குப் பதிலாக நானே ஒரு மென்பொருள் தயாரித்து இருப்பேனே என்று கேட்பவர்கள் தான் அதிகம்! அப்படியே கொஞ்சம் கொஞ்சம் தெரிந்திருந்தாலும், அதை மாற்றி அவர்களே உபயோகித்துக் கொள்பவர்கள் தான் அதிகம். அதை விற்றுக் காசாக்க நினைப்பவர்கள் பெரிய நிறுவனத்தார்களாகவே இருப்பார்கள். எனவே தான் இத்தகைய ஒரு உரிமக் கட்டுப்பாட்டை பொது உரிமை முறை வைத்திருக்கின்றது.

சரி, இப்படி உரிமைகளைப் பற்றி விவாதித்துக் கொண்டே போனால், அப்புறம் இதுவே பெரிய தொடர்கதையாகிவிடும். எனவே இத்துடன் முடித்துக் கொண்டு லினக்ஸின் கதையைத் தொடர்வோம்.

பூரண எண்கள்


ஒரு எண்ணின் (அந்த எண்ணைத் தவிர) மற்ற வகுத்திகளின் கூட்டுத்தொகை அந்த எண்ணிற்கு சமமாக இருந்தால் அந்த எண் பூரண எண் (Perfect Number) எனப்படும்.

அந்த வகையில் மிகச் சிறிய பூரண எண் 6 (வகுத்திகள் 1,2,3) 6 = 1 + 2 + 3

அடுத்த பூரண எண் 28 (வகுத்திகள் 1,2,3,4,7,14) 28 = 1 + 2 + 3 + 4 + 7 + 14

பூரண எண்களைக் கண்டறிய ஒரு முறையை முதன் முதலில் யூக்ளிட் என்பவர் கண்டறிந்தார். அதாவது (2^n) -1 என்பது பகா எண்ணாக (Prime Number) இருந்தால் 2^(n-1) * ((2^n)-1) என்பது எப்பொழுதும் இரட்டைப் படை பூரண எண்ணைத் தரும். ஏறக்குறைய 2000 ஆண்டுகள் கழித்து ஆய்லர் என்பவர் இந்த சூத்திரத்தால் அனைத்து இரட்டைப்படை பூரண எண்களையும் கணக்கிட முடியும் என நிரூபித்தார்.

எனினும், இது வரை ஒரு ஒற்றைப் படை பூரண எண் கூடக் கண்டறியப் படவில்லை. ஒற்றைப்படை பூரண எண் இருக்கமுடியாது என்பதும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

:)

நீங்கள் கண்டறிங்களேன்.

இந்தப் பூரண எண்களுக்கென்று சில புதிரான குண நலன்கள் உள்ளன. அனைத்துப் பூரண எண்களுமே 1+2+3+4+... என்ற தொடர் கூட்டலின் ஒரு பகுதியே!

உதாரணம்:

1+2+3 = 6

1+2+3+4+5+6+7 = 28

6ஐத் தவிர மற்ற அனைத்துப் பூரண எண்களையும் 1^3 + 3^3 + 5^3+... என்ற தொடர் கூட்டலின் ஒரு பகுதியாக எழுத முடியும்.

உதாரணம்: 1^3 + 3^3 = 28

ஒவ்வொரு பூரண எண்ணின் (6 ஐத்தவிர) இலக்க மூலம் (Digital Root) எப்போதும் 1 ஆகத் தான் இருக்கும்.

உதாரணம்: 28
2 + 8 = 10
1 + 0 = 1

496
4 + 9 + 6 = 19
1+9 = 10
1 + 0 = 1

சில பெரிய்ய்ய்ய்ய்ய பூரண எண்களையும் காண்போம்.

:)

இது வரை கண்டறிந்ததிலேயே மிகப் பெரிய பூரண எண் (2^756838 * ((2^756839) -1).

:)

இந்த எண் 4,55,663 இலக்கங்கள் உடையது!

இதோ பூரண எண்களின் அட்டவணை!

படம்

கணினியால் கூட யூகிக்க முடியாத எண்ணைக் கண்டறிவதன் அவசியம் தற்போது வந்துள்ளது எண் கையெழுத்தினால். (Digital Signature).

RSA அல்காரிதத்தின் படி ஒரு பகா எண்ணை எடுத்து அதன் மூலம் இரு வெவ்வேறு சாவிகள் உருவாக்கி ஒன்றை அனுப்புபவரிடமும் இன்னொன்றை பெறுபவரிடமும் கொடுக்கிறார்கள். இதுவே டிஜிட்டல் கையெழுத்து. அந்தப் பகா எண்ணை யூகிக்க முடிந்தால்? அவ்வளவு தான்! கோடிக்கணக்கில் பணம் போயே போய் விடும்.

எனவே இது போன்ற எண்களின் பண்புகள், ஒரு எண்ணை வைத்து அடுத்த எண்ணினைக் கண்டறிய முடியுமா முடியாதா? என்பது போன்ற ஆராய்ச்சிகளுக்கு எல்லையும் இல்லை, மதிப்புக்கும் அளவு இல்லை.

நட்பு எண்கள்

நட்பு எண்களும் பூரண எண்களைப் போலவே தான். இரண்டு எண்களில் ஒரு எண்ணின் வகுத்திகளின் கூட்டுத் தொகை மற்றொரு எண்ணிற்குச் சமமாக இருப்பின் அந்த எண்கள் நட்பு எண்கள் (Amicable Numbers) என்றழைக்கப்படுகின்றன.

உதாரணம்:

220: 1+2+4+5+10+11+20+22+44+55+110 = 284
284: 1+2+4+71+142 = 220

:)

இந்த நட்பு எண்களை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் கணித மேதை பிதாகரஸ்.

மிகச் சிறிய நட்பு எண் 220,284 ஆகும்.

1636ல் தான் கணித மேதை பெர்மாட் என்பவரால் மற்றொரு ஜோடி நட்பு எண்கள் (17296,18416) கண்டுபிடிக்கப்பட்டன. டெஸ்காட்ஸ் என்பவர் மூன்றாவது ஜோடி எண்களைக் (9363584,9437053) கண்டறிந்தார்.

18ம் நூற்றாண்டில் ஆய்ல் என்பவர் 64

:)

ஜோடி நட்பு எண்களின் பட்டியலை வெளியிட்டார். இவற்றில் இரண்டு ஜோடி நட்பு எண்கள் தவறானவை என்று பின்னால் நிரூபிக்கப்பட்டது. :(

1830ல் மற்றொரு ஜோடி நட்பு எண்கள் லைஜண்டர் என்பவரால் கண்டறியப்பட்டது.

இன்னொரு விந்தையும் நடந்தது. 1867ல் ஒரு 16 வயது இத்தாலி சிறுவன் நிகோலோ பகனினி என்வனால் 1184ம் 1210ம் நட்பு எண்கள் என்று அறிவித்த போது கணித உலகமே இன்ப அதிர்ச்சியில் உறைந்தது! ஏனெனில் இது தான் இரண்டாவது ஜோடி நட்பு எண்களாகும். 20 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறு கண்டறிந்தது ஒரு அதிசயம் தான்!

இன்று 600க்கும் மேற்பட்ட நட்பு எண் ஜோடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதுவரை கண்டறியப்பட்டுள்ள நட்பு ஜோடிகளில் இரண்டுமே இரட்டை எண்ணாகவோ, அல்லது இரண்டுமே ஒற்றை எண்ணாகவோ இருக்கின்றன. ஒரு இரட்டை எண், ஒரு ஒற்றை எண் கொண்ட நட்பு ஜோடி இன்னும் கண்டறியப்படவில்லை.

இந்த நட்பு எண்களின் இலக்க மூலம் எப்பொழுதும் 9 ஆகவே இருப்பது ஏன் என்பதும் யாராலும் புரிந்து கொள்ள இயலா ரகசியம்!

சில சமயங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட எண்களில் தொடர் சங்கிலியாக தொடர்புகள் காணப்படுகின்றன. அவ்வாறு காணப்படும் தொடர் எண்களை சமூக எண்கள் (Social Numbers) என்றழைக்கின்றனர்.

1918ல் பிரெஞ்சுக் கணித மேதை பௌலட் 5 இணைப்புகளுள்ள ஒரு தொடர் எண் சங்கிலியையும் (12496,14288,15472,14536,14264) 28 இணைப்புகளுடைய மற்றொரு தொடர்பு எண் சங்கிலியையும் அறிவித்தார்.

மூன்று இணைப்புகளுடைய சங்கிலித் தொடர் எண்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.

இதோ சில நட்பு எண்களின் பட்டியல்

இந்த எண் வரிசையை சமூக எண்கள் என்றழைக்கின்றனர்.

12496,14288,15472,14536,14264

12496ன் வகுத்திகளைக் கூட்டினால் 14288 வருகிறது!

14288ன் வகுத்திகளைக் கூட்டினால் 15472 வருகிறது!

15472ன் வகுத்திகளைக் கூட்டினால் 14536 வருகிறது!

14536ன் வகுத்திகளைக் கூட்டினால் 14264 வருகிறது!

அப்படியானால் அது ஒரு சமூகத்தைச் சார்ந்தது தானே!

பார்த்'தீ'பனும் வடி'வேலை'யும்!

பார்த்திபன் முதலாளி. வடிவேலு வேலை கேட்டு வருகின்றார்.

பார்த்திபன்: கருப்புக் காக்கா மாதிரி இருக்க, வெள்ளையுஞ் சொள்ளையுமா வந்திருக்கியே உன்ன ஏற்கனவே இந்த மாதிரி டிரஸ்ஸில எங்கேயோ பார்த்திருக்கேனே?

வடிவேலு: (அடங்கொய்யா, துபாய் வேலை இவனுக்கும் தெரியும் போல இருக்கே. ஆனா அவன் வேற! அவன் இவன் இல்ல.). வணக்கம் சார். என்னய எங்க சார் பாத்திருக்கப் போறீக. நான் அப்படி இப்படி அங்கே இங்கே உலாத்திக்கிட்டுத் தான் இருப்பேன். அதப் பாத்திருப்பீக. உங்க கண்ணுல இருந்து யாரு தப்பிக்க முடியும்?

பா: அது சரி, ஒனக்கு என்னென்ன வேலை தெரியும்?

வ: இப்பக் கேட்டீக பாருங்க. இது கேள்வி. இது வரைக்கும் யாரும் இப்படி கேட்டிருக்க மாட்டாகள்ல!

பா: கேள்வி கேட்டா பதில் சொல்லுடா ங்கொய்யா! திருப்பி கேள்வி கேக்குற?

வ: அது வேறொன்னுமில்லண்ணே. பழக்க தோசம்.

பா: என்னது? அண்ணனா? நான் உனக்கு அண்ணனாடா?

வ: அய்யோ! கோவிச்சுக்காதீக ஐயா.

பா: என்ன? ஐயாவா? என்னைப் பாத்தா ராமதாசு மாதிரி தெரியுதா உனக்கு?

வ: எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிருந்தா இவ்வளவும் நடக்குமா?

பா: என்ன முணுமுணுப்பு?

வ: இது வேற. ஆங்! என்ன வேலை தெரியுமுன்னு தானே கேட்டீக? எந்த வேலை தெரியாதுன்னு கேளுங்கப்பு!

பா: திரும்பவும் சொல்றேன். கேள்விய நான் தான் கேட்பேன்.

வ: என்ன திரும்பவும் சொல்றேன்?

பா: என்ன, ஏது, எப்போ, ஏன், எங்கே, யாரு ங்குற வார்த்தைய இனிமேல நீ பேசுனே மவனே!

வ: என்ன இப்படி திட்றீக?

பா: நீ தானடா சொன்ன ஐயான்னு. அதான் மவனேன்னு சொன்னேன். சரி சரி. உனக்கு கம்ப்யூட்டர் தெரியுமா?

வ: இதென்ன இப்படிக் கேட்டுப்புட்டீக. கம்ப்யூட்டரோட பிறந்து கம்ப்யூட்டரோட வளர்ந்து கம்ப்யூட்டரோடே வாழ்றவன்ல நானு. என்னப் போயி.

பா: அப்போ உங்கம்மா, உங்கப்பா, உங்க குடும்பம் எல்லாம் கம்ப்யூட்டர்னு சொல்றியா? உங்களுக்கெல்லாம் கரண்ட் ஷாக் கொடுக்கனும்டா.

வ: (சுற்றி முற்றும் பார்த்து விட்டு) இங்கே ஏசியே இல்லையே. பின்ன எதுக்கு கம்ப்யூட்டர் வேலை தெரியுமான்னு கேட்குறீக?

பா: ஓ! ஏ.சி. இருந்தாத் தான் நீங்க வேலை செய்வீகளோ? சரி. கம்ப்யூட்டர்ல ஒனக்கு என்னெலாம் தெரியும்?

வ: ஹும். இது சிம்பிள் கேள்வி. குட் கொஸ்டின். கம்ப்யூட்டர்ல மானிட்டர், சிபியு, கீபோர்டு, அப்புறம் அந்த வயரு வாலு மாதிரி தெரியுமே, ஆங், மவுசு எல்லாம் தான் தெரியும்.

பா: (அவருக்கே உரிய பார்வையுடன்) சார், இங்க பாருங்க சார். நான் கேள்வி கேட்குறேன் சார். கேலி பேசினீங்கன்னா சார், அப்புறம் இந்த மாலை போட்டு சார், மஞ்சள் தண்ணி, …

வ: (வாயைப் பொத்திக் கொள்கின்றார்)

பா: இப்போ சொல்லு, கம்ப்யூட்டர்ல என்னெலாம் தெரியும்?

வ: ஆபீசு ஆபீசுன்னு ஒரு அண்டர்வேர் சாரி சாப்ட்வேர் தெரியும். எல்லாம் நம்ம பய பில் எழுதினது. நல்ல பய. நம்ம பிரண்டு தேன். நிறைய மயில் அனுப்பிருக்கேன்ல.

பா: என்னது? மயிலா?

வ: சாரி, டங் சிலிப் ஆயிருச்சி. மெயில் அனுப்பிருக்கேன்ல.

பா: ஓஹோ! பதில் ஏதும் வந்துச்சா ஒனக்கு?

வ: அது நிறைய வந்துச்சு. எனக்கு தான் படிக்க நேரமில்ல.

பா: சரி. அந்த ரூம்ல சிஸ்டத்துல போயி, யாஹூவுல "மண்ணாங்கட்டி" அப்படீன்னு தேடி முத வர்ற பக்கத்தை பிரிண்ட் அவுட் போட்டு எடுத்துட்டு வா. உன்னை வேலைக்கு சேர்த்துக்குறேன்.

வ: முணுமுணுத்துக் கொண்டே உள்ளே நுழைகின்றார். நான் தான் ஆபீஸே தெரியும்னு சொல்லிட்டேன்ல, அப்புறம் என்ன இவன் என்னை டெஸ்டு பண்ணிப் பாக்குறது? ஐயோ, இந்த யாஹூ எங்கே இருக்குன்னே தெரியலியே. நம்ம கால்குலேட்டரைக் கூட பாத்தது இல்லையே. இவனைப் பார்த்ததுமே நான் எஸ்கேப் ஆகியிருக்கணும். இன்னும் என்னென்ன நடக்கப் போவுதோ?

வடிவேலு: (உள்ளே நுழைந்து கொண்டே) என்னா வெக்கை … என்னா வெக்கை. இதுக்குத் தான் ஏசியில்லாத ஆபீசுல வேல செய்யாதேன்னு பழமொழியே வச்சான்.

பார்த்திபன்: (வெளியே உட்கார்ந்து கொண்டே) என்ன அங்கே சத்தம்?

வ: ஒன்னுமில்ல. இருட்டா இருக்கு அதான் லைட் எங்கேன்னு கேட்டேன்.

பா: பட்டப்பகல்லயே உனக்கு ஒன்னும் தெரியல. உனக்கு லைட் வேறயா? உனக்கு ரைட் சைட்ல இருக்குற சுவிட்ச் போர்ட்ல 3வது ரோல பீச்சாங்கைப்பக்கம் 2வது சுவிச்சு இருக்குல்ல அதைப் போடு. லைட் வரும். தெரியாத்தனமா ப்ளக்குல கையைக் கொடுத்து ஆபீஸ் பீசைப் புடுங்க வைச்சிடாத.

வ: (எனக்கு இது நல்லா வேணும். எனக்கென்னவோ இவன் கிட்டே வேலை பார்க்கலாம்னே தோணலியே. பேசாம பேக் அடிச்சு எஸ்கேப் ஆயிருவோமா?)

பா: என்ன இன்னும் லைட் எரியக் காணோம்?

வ: ஆஹா. இவன் வுடமாட்டான் போல இருக்கே. வசம்மா வந்து மாட்டிக்கிட்டோம் போல. பின்னால ஏதாச்சும் வழியிருக்கான்னு முதல்ல பார்க்கனும். (தடவித்தடவி லைட்டைப் போடுகின்றார்)

(உள்ளே வெளிச்சம் வருகின்றது. 4 கம்ப்யூட்டர்கள், ஒரு பிரிண்டர், ஒரு டிவி எல்லாம் இருக்கின்றது.)

சிறிது நேரத்தில் டமார் என்று சத்தம் கேக்கிறது. ஓடி வந்து பார்த்திபன் பார்க்கின்றார். கணினிக்கு முன் உட்காரும் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து வடிவேலு சறுக்கிப் பார்க்க, அது வேகமாகச் சென்று டிவி மேலே மோத, அவர் மேல் டிவி பெட்டி கிடக்கின்றது. அவருக்குக் கீழே சக்கர நாற்காலி கிடக்கின்றது.

பா: டேய், என்ன காரியம் செஞ்சே. டிவி என்ன வில தெரியுமா உனக்கு?

வ: அட, இதெல்லாம் எனக்கு தூசி மாதிரி. கலைஞர் கிட்டே கேட்டா எத்தனை டிவி வேணாலும் கொடுக்கப் போறாரு.

பா: நான் எதுக்குடா கலைஞர் கிட்டே கேக்கனும். உன் கிட்ட தான் கேப்பேன். டிவி பொட்டிக்கு உண்டான காசு 10000 ரூவா கழியிற வரை என் கிட்டே நீ கொத்தடிமை வேலை பார்க்கனும். தெரிஞ்சதா?

வ: என்னது அடிமையா?

பா: ஆமா. இல்லைன்னா 10000 ரூவா எண்ணி எடுத்து வையி. உன்னை விட்டுட்றேன்.

வ: 10000 ரூவாயா? அத நான் நெனச்சது கூட இல்லப்பு. இந்த டப்பா பொட்டிக்கு அவ்ளோ விலையா?

பா: சரி. 10100 ஆக் கொடு.

வ: (ஆ. என்ன இது? வர வர அமௌண்டு கூடுதே!) மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தனக்கே உண்டான பார்வையுடன், குரலை உறுதியாக்கிக் கொண்டு, "எத்தனை நாள் வேலை பார்க்கனும்?"

பா: என்னது நாளா? வருசம்னு கேளுடா ங்கொய்யா!

வ: என்னை எல்லாரும் நல்லவன்னு சொல்றாங்கய்யா. கொஞ்சம் தயவு பண்ணி சாப்பாடாவது போடு ராசா.

பா: அது! தினம் 2 வேளை முயற்சி பண்றேன். ஆனா, நீ வேல பார்க்கும் தெறமையைப் பொருத்து அது மூனாவோ அல்லது ஒன்னாவோ அல்லது இல்லாமப் போகவோ செய்யலாம். சரி பிரிண்ட் அவுட் கேட்டேனே என்னாச்சு?

பார்த்திபன்: பிரிண்ட் அவுட் எடுக்கச் சொன்னா எடுக்காம என் மூஞ்சைப் பாத்தா என்ன அர்த்தம்? இப்போ மட்டும் நீ கம்ப்யூட்டர் ஆபரேட் பண்ண எனக்குத் தெரியாதுன்னு சொன்னேன்னு வை…

வடிவேலு: (ஆர்வத்துடன் முகத்தில் கொஞ்சம் நப்பாசையோடு) என்னை விட்டுடுவே தானே?

பா: அதான் இல்ல. டிவி பொட்டி கடனைத் தீர்க்கிற வரை பாத்ரூம் கழுவனும்.

வ: அதெல்லாம் எனக்குத் தெரியாது.

பா: என்னாது? தெரியாதா? அப்போ துபாய்ல அந்த வேலை பாத்தது நீ இல்லையா?

வ: துபாயா? அது எந்தப் பக்கம் இருக்கு?

பா: இதோ இந்தக் கதவைத் திறந்தா….

வ: துபாய் போகலாமா?

பா: ஆமா, நல்லா பாத்ரூமைத் துடைச்சிக்கிட்டே யோசி, துபாய் வந்துரும்.

வ: இங்கே பாருப்பா, இதெல்லாம் நல்லால்ல. ரூம்ல உடையிற சாமான்லாம் மேலே வைச்சிட்டு, இங்கிட்டும் அங்கிட்டும் ஓடுற நாற்காலியை வைச்சிருந்தா இப்படித் தான் நடக்கும். என் மேலே தப்பே இல்ல. என்னை விடு நான் வர்றேன். (முகத்தைக் கூடப் பார்க்காமல் விடுக்கென்று கிளம்புகிறார்)

பா: (கொஞ்சம் கூட அதிர்ச்சியில்லாமல் வடிவேலு போவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.)

வ: அப்பாடி! எப்படியோ தப்பிச்சு வந்துட்டோம். இவன் கிட்டே மனுசன் வேலை பாக்க முடியுமாய்யா? (மெல்லத் திரும்பிப் பார்க்கிறார்) என்ன ஆளையே காணோம். துரத்தி வருவான்னு நினைச்சேனே. வரலியே? அப்படி இருக்குமோ? ச்சேச்சே இருக்காது. என்னை ஒருத்தன் துரத்திப் பிடிச்சிர முடியுமா என்ன? எதுக்கும் கண்ணைப் பின்னால் வைச்சிக்கிட்டே நடக்கனும். நல்லவேளை அட்ரெஸைக் கொடுத்துத் தொலைக்கல. (என்ற படியே நடக்கின்றார்)

(வடிவேலு வீட்டுக்குத் திரும்புகின்றார். பூட்டு போட்டுப் பூட்டியிருந்த வீடு திறந்து கிடக்கின்றது)

வ: வேகமாக உள்ளே நுழைகின்றார். எவண்டா அவன், என் வீடுன்னு தெரிஞ்சும் உள்ளே நுழைஞ்சது? உள்ளே என்ன இருக்குன்னு நுழையிறீங்கடா? பூட்டாவது மிஞ்சிருக்குன்னு நினைச்சேன். இப்போ அதையும் உடைச்சிட்டீங்களாடா? இன்னும் உள்ளே என்னென்ன உடைச்சிருக்காய்ங்கன்னு பார்ப்போம்.

(உள்ளே நுழைந்ததும் அவர் பார்த்திபனின் அலுவலகத்தில் உடைத்த டிவி பெட்டி நடுக்கூடத்தில் கிடக்கின்றது. அப்போது அவர் முகத்தில் திகிலைப் பார்க்க வேண்டுமே?!)

வ: (மனதுள்: ஆகா! வந்துட்டான்யா! எப்படியோ என் வீட்டைக் கண்டுபிடிச்சிட்டான் போல இருக்கே? என் வீடுன்னு வெளியே ஏதாச்சும் எழுதி ஒட்டிருக்கா என்ன? பூட்டை உடைச்சது அவனாத் தான் இருக்குமோ?)

(வீடு முழுதும் தேடிப்பார்க்கிறார். பார்த்திபனைக் காணவில்லை. மெதுவாக வெளியே வருகின்றார். எதிர்வீட்டு சிறுவன் அவரையே பார்த்த வண்ணம் இருப்பதைப் பார்க்கிறார்)

வ: (இவன் கிட்டே கேப்போம். என்ன நடந்ததுன்னு பார்த்திருப்பான்ல, பார்த்திருப்பான்ல!) டேய் பையா! இங்கே வாடா!

பையன்: நான் எதுக்கு வரணும்? வேணும்னா நீ இங்கே வாய்யா?

வ: (ஆஹா! நம்மை ஒரு துரும்பும் மதிக்க மாட்டேங்குதே!) ஏண்டா, நான் வயசுல மூத்தவந் தானே? என்னை போய் நீ வான்னு சொல்லலாமா?

பை: அதான்யா வாடான்னு சொல்லாம விட்டேன்.

வ: சர்த்தான். வில்லங்க சர்டிபிகேட் கொடுக்குற ஆபீசரு பையனாச்சே. பொறக்கும் போதே வில்லங்கத்தோட பொறந்திருக்கே. சரீ. எதிர்த்தாப்புல இருக்குற என் வீட்டுப் பூட்டை யாரும் உடைச்சாங்களா?

பை: அது உன் வீடா?

வ: (கொஞ்சம் கூட விட மாட்டேங்குறாய்ங்களே! கிடைச்ச கேப்புலல்லாம் நுழையிறாய்ங்களே!) சரி. என் வீடில்ல. வாடகை வீடு தான். அந்தப் பூட்டை யாரும் உடைச்சத நீ பாத்தியா?

பை: இல்லியே. நான் பாத்துட்டே தான் இருந்தேன். யாரும் உடைக்கலியே.

வ: அப்புறம் எப்படித் திறந்திருக்கு? டேய் உண்மையைச் சொல்லு. உடைஞ்ச பூட்டைக் கூடக் காணோம் என்பவர் பையன் கையில் ஏதோ மறைப்பதைப் பார்க்கிறார். டேய் அதைக் கொண்டா ….(பிடுங்கினால், அவர் வீட்டுப் பூட்டு!) இந்த வயசுலேயே இப்படிப் பொய் சொல்றியேடா.

பை: யோவ். ஒழுங்கா யார்ட்ட பேசுறோம்னு பாத்துப் பேசு. நான் ஒன்னும் பொய் சொல்லல. வீணா வில்லங்கத்தை விலைக்கு வாங்காதே!

வ: என்ன? என்ன? இப்போ தான் பூட்டை உடைக்கலைன்னுட்டு கையில் பூட்டையே வைச்சிருக்கியே. பொய் இல்லையா?

பை: (முணுக்கென்று சிரித்த படி) ஆமா, இது ஒரு பூட்டு. அதை உடைக்க வேற செய்யனுமாக்கும்? அந்த சாக்லேட் மாமா வந்து இழுத்ததுமே கையோட வந்துருச்சு. அதான் யாரும் உடைக்கலன்னு சொன்னேன்.

வ: யாரு? சாக்லேட் மாமாவா? எவன் அவன்?

(முதுகில் யாரோ கை வைக்க, கையை உதறி விடுகிறார் வடிவேலு. மீண்டும் கை வைக்க, மெல்ல சைட் லுக் விட்டால், குச்சி மிட்டாய் ஒன்றை வாயில் வைத்துக் கொண்டு பார்த்திபன் நிற்பதைப் பார்த்ததும் உடுக்கடிக்க ஆரம்பிக்கிறது அவருக்கு)

பா: குட்மார்னிங் சார்

வ: ஹிஹி. குட்மார்னிங். அது ஒன்னுமில்ல. எங்க வீட்ல இருக்குற டிவியைக் கொடுத்துட்டா டிவியை ஒடைச்சதுக்குச் சரியாயிடும்ல அதான் எடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன்.

பா: அப்படிங்களா சார்? பாத்திரத்தை நல்லாக் கழுவிட்டுக் கவுத்திப் பாத்தாக் கூட ஏதாச்சும் உள்ளே ஒட்டிருக்கும். ஆனா உங்க வீட்ல அப்படி எதுவும் இல்லாம சுத்தமா இருக்கே சார்.

வ: அதுவா? எல்லாம் சர்வீஸுக்குப் போயிருக்கு. வந்ததும் தந்துட்றேன்.

பா: இந்த வரும். ஆனா வராது வேலைல்லாம் எங்கிட்டே ஆவாது. இப்போ என் டிவியை உன் வீட்ல வந்து வைச்சதுக்கு 1000 ரூவா சேத்து 11100 வையி, ஒன்னை விட்டுட்றேன்.

வ: (மீட்டர் வட்டி கேள்விப்பட்டிருக்கேன். நிமிச வட்டி கூடக் கேள்விப்பட்டிருக்கேன். இது நேனோ வட்டியால்ல இருக்குது.) ஐயா சாமி, நான் எங்கேயும் போவல முதல்ல உன் கடனைக் கழிக்கிறது தான் என் வாழ்க்கை லட்சியம்.

பா: குட் டெசிசன். இப்போ என்ன பண்றே, உடுத்துன துணியோட அப்படியே என் ஆபீஸுக்கு வர்றே. இனி அங்கே தான் உனக்கு எல்லாமே.

வ: (என்னமோ காதலியைக் கூட்டிப் போறா மாதிரி உடுத்துன துணியோட வரச் சொல்றானே?)…அதான் வர்றேன்ல. (என்னை நீயா வேலையை விட்டுப் போன்னு சொல்ல வைக்கல, வைகைப் புயல் வடிவேலுன்ற என் பேரை சோதாப் பயல் வடிவேலுன்னு மாத்திக்கிறேன்)

பா: நீ என்ன நினைக்கிறேன்னு எனக்குத் தெரியும். நானா உன்னை வேலையை விட்டுப் போன்னு சொல்லவே மாட்டேன்.

வ: (என்ன சரவணன் இது? அவருக்கு மட்டும் தான் நான் நினைக்கிறது தெரியும்னு நினைச்சா, இவனுக்கும் தெரியுதே? சும்மா பொழுதப் போக்கக் காலேஜு படிச்சிட்டு, இருக்குற அம்பது பட்டன நொச் நொச்சுன்னு தட்டிட்டு ஆயிரக்கணக்கா சம்பாதிக்கிற உங்களுக்கெல்லாம் வேர்வை சிந்தி வேல பாக்குற எங்க கஷ்டம்லாம் எப்படித் தெரியும்?)

பா: அட! போனா போகட்டும்னு கொஞ்சம் யோசிக்க விட்டா என்னல்லாம் யோசிக்கிறே நீ? இனி என்னைக் கேட்டுத் தான் நீ எதுன்னாலும் யோசிக்கவே செய்யனும். என்னவோ கம்ப்யூட்டர் வேல பாக்குறவன்லாம் லாட்டரில சீட்டு விழுந்தவன்னு உன்ன மாதிரி பல பேரு நினைக்கிறானுங்க. கேப்மாரி, மொள்ள மாரி, முடிச்சவுக்கி, ரவுடி, பிச்சைக்காரன், பொறம்போக்கு…

வ: யப்பா யப்பா யப்பா நிறுத்து. ரோட்ல போறவன்லாம் என்னைத் திட்றதா நினைச்சு முறைக்கிறானுங்க. என்ன சொல்ல வர்றே அதச் சொல்லு …

பா: ம்ம்ம். இவனுங்களை எல்லாம் விடக் கேவலமான உன் கிட்டே கூட வேலை வாங்குறது ஈசி தான். ஆனா இந்தப் பாழாப் போன கம்ப்யூட்டர் வேல இருக்கே அது இத விடக் கஷ்டம் தெரியுமா?

வ: ஆ! குளு குளு ஏசியில, அரைமணிக்கு ஒரு கூல்ட்ரிங்க்ஸு, தினமும் பார்ட்டின்னு சுத்துறானுங்க. அது கஷ்டமான வேலையா?

பா: ஆமாடா டுபுக்கு. ஆமா, கம்ப்யூட்டர் தெரியும்னு சொன்னியே அதுல்லாம் நிசம்மாவே பொய்யா?

வ: (பார்த்திபனின் லுக்கைப் பாத்ததும் மெல்ல ஆமாம் என்று தலையாட்டுகின்றார்…)

பா: ம்ம். உனக்கு அந்தக் கஷ்டம்னா என்னன்னு புரியவைக்கனுமே? என்ன செய்யலாம்? ம்ம்ம். இப்படி வைச்சிக்குவோம். கொஞ்ச நேரத்துக்கு நான் தான் வேலைக்காரன். நீ தான் முதலாளி.

வ: ஆஹா! இது நல்லாருக்கே! இது நல்லாருக்கே!

பா: இருடா. என்னை மாதிரி சொல்றதை அப்படியே செய்ற ஒரு வேலைக்காரனை நீ பாத்திருக்கவே முடியாது. இப்போ என்னை ஒரு கதை சொல்ல வைக்கனும்.

வ: அப்படியா? ஆஹா. ஆஹா. ரொம்ப ஈசியாச்சே. பச்சப் புள்ளட்டக் கேட்டாக் கூடச் சொல்லிடுமே?

பா: சரி ரெடியா?

வ: எப்பவோ ரெடில்ல.

பா: இதுக்கு ஒன்னும் குறைச்சலில்ல.

வ: சரி சரி. விஷயத்துக்கு வருவோம். நான் அப்படி உக்கார்ந்துக்கிறேன்.

பா: (பக்கத்தில் உட்கார வருகின்றார்)

வ: முதலாளி பக்கத்துல வேலைக்காரன் உக்காரலாமா? நீ நில்லு.

பா: (ம். உனக்கு இன்னிக்கு நேரம் சரியில்ல. வைச்சிக்கிறேண்டா)

வ: சரி. ஒரு கதை சொல்லு.

பா: சரி. ஒரு கதை.

வ: அட. ஒரு கதை சொல்லுன்னா.

பா: அட. ஒரு கதை.

வ: என்ன இது சின்னப் புள்ளத் தனமா இருக்கு. எடக்கு மடக்காவே பதில் சொல்லிட்டிருக்கே. ஏதாச்சும் ஒரு கதை சொல்லு.

பா: ஏதாச்சும் ஒரு கதை.

வ: ஏம்ப்பா இந்தக் குரங்கு, தொப்பிக்காரன் கதை தெரியாதா என்ன? அதையாவது சொல்லு.

பா: அதையாவது.

வ: அய்யோ! சொல்லேம்ப்பா.

பா: அய்யோ!

வ: (படாரென்று எழுந்த படி) போதும்ப்பா போதும்.

பா: இப்போ தெரியுதாடா? ஏதும் தெரியாத கம்ப்யூட்டர வேல வாங்குறது எவ்ளோ கஷ்டம்னு?

தரவுச் சுரங்கம் - 22

தரவுச் சுரங்கத்தின் ஒரு முக்கியமான அங்கமான தரவுக் கிட்டங்கியைப் பற்றிச் சற்று விளக்கமாகக் காண்கின்றோம். முந்தைய பகுதிகளில் தரவுக் கிட்டங்கியின் நன்மை தீமைகளைப் பட்டியலிட்டோம். ஒரு நிறுவனத்தின் அனைத்து வரலாற்றுத் தரவுகளின் ஒட்டு மொத்த மூலமாக விளங்கி அதைப் பயன்படுத்தும் அனைவருக்கும் வழங்கத் தயாராக இருக்க வேண்டும் அல்லவா? எனவே அதை உருவாக்கும் முறைகள் பற்றி இந்தப் பகுதியில் காணலாம்.

தரவுக் கிட்டங்கிகளை இரண்டு முறைகளில் உருவாக்கலாம். பில் இன்மானின் (Bill Inmon) மேலிருந்து கீழ் அணுகுமுறை மற்றும் ரால்ஃப் கிம்பாலின் (Ralph Kimball) கீழிருந்து மேல் அணுகுமுறை ஆகிய இரண்டு முறைகளையும் ஒவ்வொன்றாகக் காண்போம்.

பில் இன்மானின் (Bill Inmon) மேலிருந்து கீழ் அணுகுமுறை:

Data Warehouse Designஇந்த அணுகுமுறையின் படி, தரவுகளின் மூல வழங்கியிலிருந்து தரவுக் கிட்டங்கியின் வடிவமைப்பு ஆரம்பமாகின்றது. பல்வேறு தரவு மூலங்களிலிருந்தும் பிரித்தெடுத்தல், உருமாற்றம், ஏற்றுதல் ஆகிய மூன்று படிநிலைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஒட்டு மொத்த நிறுவனத்திற்கான தரவுக் கிட்டங்கி முதலில் வடிவாக்கம் செய்யப்படுகின்றது. பின்னர் அதிலிருந்து மீண்டும் தேவையான தரவு அங்காடிகள் (Data Marts) தமக்குத் தேவையான வகையில் மீண்டும் மேலே கண்ட பிரித்தெடுத்தல், உருமாற்றம், ஏற்றுதல் ஆகிய படிநிலைகளுக்கு உட்படுத்தப்பட்டு  நட்சத்திர திட்டங்களாக தரவு மாதிரியைப் (Data Models) பெற்றுக் கொள்கின்றன. இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தைப் பார்த்தால் எளிதாகப் புரியும். இந்த அணுகுமுறையின் படி ஒட்டு மொத்த தரவுக் கிட்டங்கியை உருவாக்கிய பின்னர் தேவையான தரவு அங்காடிகள் தமக்குத் தேவையான தரவுகளைப் பெற முடிகின்றது.

Data Warehouse Designரால்ஃப் கிம்பாலின் கீழிருந்து மேல் அணுகுமுறை:

இந்த அணுகுமுறையின் படி முதலில் தேவைக்குத் தகுந்தவாறு தரவு அங்காடிகள் உருவாக்கப்படுகின்றன. அவ்வாறு உருவாக்கப்படும் போதே தரவு மாதிரிகளும், பரிமாணங்களும், தேவையான செய்திகளும் நிர்ணயிக்கப்படுகின்றன. அதன் பின்னர், அந்தச் செய்திகளும் பரிமாணங்களும் எந்தத் தரவு மூலங்களில் இருக்கின்றன என்று கண்டறியப்பட்டு பின்னர் பிரித்தெடுத்தல், உருமாற்றம், ஏற்றுதல் ஆகிய படிநிலைகளுக்கு உட்படுத்தப்பட்டு தரவு அங்காடிகளால் பெறப்படுகின்றன. இந்த முறையில் ஒட்டு மொத்த தரவுக் கிட்டங்கி மேலே இல்லாமல் கீழிருந்து சிறு சிறு அங்காடிகளின் தொகுப்பாக அமைவதைக் காணலாம். கீழிருந்து மேலான இந்த அணுகுமுறையில் தரவுக் கிட்டங்கியின் அமைப்பு நடுவில் இல்லாமல் கீழே இருக்கின்றது.

வழக்கம் போல் இந்த இரண்டு அணுகுமுறைகளிலும் நன்மை தீமைகளுண்டு. இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்விக்குப் பதிலாக, எந்த ஒரு நிறுவனம் பரிணாம வளர்ச்சியடைந்து முதிர்ச்சியடைந்து அதன் தரவுத் தேவைகளைப் பற்றி நன்கு அறிந்தும் தரவு அமைப்புகளைப் பூர்த்தியாகவும் வைத்திருக்கின்றதோ அவ்வகை நிறுவனத்திற்கு மேலிருந்து கீழ் அணுகுமுறை சிறப்பாக இருக்கும். (எ.கா. இரயில் போக்குவரத்து) அதே சமயத்தில் தற்போது பரிணாம வளர்ச்சி கண்டு வரும், அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும் தரவு அமைப்பைக் கொண்டிருக்கும் நிறுவனத்திற்கு கீழிருந்து மேலான அணுகுமுறை சிறப்பாக இருக்கும். (எ.கா. தொலைதொடர்பு மற்றும் கணினி) இவ்விரு அணுகுமுறைகளையும் ஒன்றிணைத்து கலப்பின அணுகுமுறைகளும் உருவாகின்றன. எனவே நமது நிறுவனத்திற்கு எது பொருத்தம் என்று உணர்ந்து அதைச் செயல்படுத்துவது நல்லது.

தரவுக் கிட்டங்கிகள் மற்றும் அங்காடிகளுக்கான சூழல் பின்வருவனவற்றை உள்ளடக்கியது. எனவே தரவுக் கிட்டங்கியை உருவாக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • கிட்டங்கி அல்லது அங்காடிக்குத் தரவை வழங்கும் மூல அமைப்புகள்;
  • தரவு ஒருங்கிணைப்பு தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டிற்குத் தரவைத் தயாரிக்கத் தேவையான செயல்முறைகள்;
  • ஒரு நிறுவனத்தின் தரவுக் கிட்டங்கி அல்லது தரவு அங்காடிகளில் தரவைச் சேமிப்பதற்கான பல்வேறு கட்டமைப்புகள்;
  • பல்வேறு பயனர்களுக்கான பல்வேறு கருவிகள் மற்றும் பயன்பாடுகள்;
  • கிட்டங்கி அல்லது அங்காடி அதன் நோக்கங்களைப் பூர்த்திசெய்கிறதா என்பதை உறுதிப்படுத்த, மீதரவு (Meta Data), தரவுத் தரம் மற்றும் நிர்வாகச் செயல்முறைகள் இருக்க வேண்டும்.

மீதரவு எனப்படுவது தரவு பற்றிய தரவு ஆகும். மேனிலைத்தரவு என்றும் அழைக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக ஒரு புகைப்படம் என்பது தரவு ஆனால், அது எந்தப் புகைப்படக் கருவி கொண்டு எடுக்கப்பட்டது என்பது மீதரவு ஆகும். ஒரு தரவுப் பட்டியலின் நெடுவரிசைத் தலைப்புகளை மேனிலைத் தரவு எனலாம்.

அடுத்த பகுதியில் தரவுக் கிட்டங்கியின் படிநிலைகளைக் காணலாம்.

தரவுச் சுரங்கம் - 21

தரவுச் சுரங்கத்தில் ஒரு முக்கியமான பங்கு தரவுக்கிடங்குக்கு உண்டு. அதனைப் பராமரிப்பதில் இருக்கும் சிக்கல்களை முந்தைய பகுதியில் பார்த்தோம். இப்போது அந்தத் தடைகளைத் தாண்டி அதைச் சரியாகப் பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகளைக் காண்போம். இந்த நன்மைகளைக் காணும் போது பல்லாண்டுகளாகக் கணினியைப் பயன்படுத்தி நிர்வகிக்கும் ஒவ்வொரு நிறுவனமும் தமக்கேற்ற தரவுக் கிடங்கைப் பராமரிப்பது அவசியம் என்பது புரியும்.

தரவுக் கிடங்கின் நன்மைகள்:

  1. தரவு சார்ந்த முடிவெடுத்தல் (Data Driven Decision Making): ஒரு தரவுக் கிடங்கு நிறுவனத்தின் அனைத்து தரவுகளுக்கும் ஒரே உண்மை மூலமாக செயல்படுகிறது, இது மேலாளர்கள் காண்பதற்கு ஏதுவாக வழக்கமான அறிக்கைகள் மற்றும் பார்வைகளை உருவாக்க உதவுகிறது. இது வணிகங்கள் தயாரிப்பு மேம்பாட்டிலிருந்து சந்தைப்படுத்தல் நுகர்வோரைச் சென்று சேர்வது வரை அனைத்திலும் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும்.
  • திறன் மேம்பாடு (Increased Efficiency): தரவு சேகரிப்பு, செயலாக்கம் மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள பல பணிகளை ஒரு தரவுக் கிடங்கு தானியக்கப்படுத்த முடியும். இது ஊழியர்களின் நேரத்தை மிகவும் சேமித்து அவர்களது நேரத்தை மேலும் சமயோசிதமான பணிகளில் கவனம் செலுத்த அனுமதிக்கும்.
  • குறைந்த செலவு: ஒரு தரவு கிடங்கு நிறுவனங்களுக்கு பல்வேறு வழிகளில் செலவைக் குறைக்க உதவும். எடுத்துக்காட்டாக, நிறுவனங்கள் திறனற்ற தன்மைகளை அடையாளம் காண்பதற்கும் அவற்றை நீக்குவதற்கும், அவற்றின் விநியோக சங்கிலிகளை மேம்படுத்துவதற்கும் உதவும்.
  • வாடிக்கையாளர் சேவை மேம்பாடு: வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை நன்கு புரிந்துகொள்ள ஒரு தரவுக் கிடங்கு நிறுவனங்களுக்கு உதவும். இது மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் சேவை மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கு வழிவகுக்கும். மீண்டும் மீண்டும் நம்மை நோக்கியே வருபவர் தானே வாடிக்கையாளர்? ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் பல்லாண்டுகள் தொடர்பை உருவாக்கி மேம்படுத்தி சிறந்த சேவையளிப்பதன் மூலம் வாடிக்கையாளரையும் லாபத்தையும் தக்க வைத்துக் கொள்ளலாம்.
  • சந்தைச் சவால்கள் சமாளிப்பு: மிகுந்த சவால் மிக்க சந்தை கொண்ட இன்றைய உலகில், சிறந்த முடிவுகளை விரைவாக எடுக்க உதவுவதன் மூலம் தரவுக் கிடங்கு நிறுவனங்களுக்கு முன்னோக்கிச் செல்ல வழிகாட்டியாக விளங்கும்.
  • இடர் மேலாண்மை: இன்றைய உலகில் ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து இருக்கின்றது. நமக்கான இக்கட்டு நிறுவனத்தின் உள்ளே, வெளியே என்று பல கோணங்களிலிருந்து ஏற்பட வாய்ப்பிருக்கின்றது. தரவுக் கிடங்கின் மூலம் ஒட்டு மொத்தத் தகவல்களையும் ஒரே இடத்தில் காண முடிவதால் பல கோணங்களிலும் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், நமக்கு சரக்கு மற்றும் சேவையளிப்போரைக் கண்காணித்து அறிந்து கொள்ள முடியும். இதனால் மோசடிகளை மிக விரைவில் கண்டறிந்து களவையும் கழிவையும் குறைக்க இயலும்.
  • ஆராய்ச்சியில் சிக்கனம்: எப்போதும் புதிய கண்டுபிடிப்புகளையே நாடி நிற்கும் நிறுவனங்கள் (எடுத்துக்காட்டு மருத்துவம், வாகன உற்பத்தி) தங்கள் ஆராய்ச்சிக்குச் செலவிடும் தொகையைக் குறைக்க இந்தத் தரவுக் கிடங்கிகள் உதவி புரிகின்றன. பெருந்தரவைப் பயன்படுத்துவதன் மூலம் தேவையற்ற செலவுகளைக் குறைக்கலாம்.
  • தரவின் தரம்: தரவென்றாலே அது தரப்படுத்தப்பட்டது என்று முன்பே அறிவோம். இருந்தாலும் அதை இன்னும் துப்புரவு செய்தால் இன்னும் பொலிவாகத் திகழும் அல்லவா? ஒரு சாதாரண பொருள் சேமிப்பு அறைக்கும் ஒரு பெரிய அறிவியல் சார்ந்த கிட்டங்கிக்கும் இருக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தை நாம் உணர வேண்டும். சாதாரண அறையில் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்க இயலும். ஆனால் ஒரு துறைமுகத்திலிருக்கும் ஆயிரக்கணக்கான கப்பல்களில் ஏற்றும் வகையில் பொருட்களை அடுக்கி வைக்க மூட்டைகள் காணாது அல்லவா? மிகப்பெரிய இரும்புக் கொள்கலன்களில் கொண்டு செல்வதைக் காண்கின்றோம். அதே போன்று தரவமைப்பிலும் செய்து தரப்படுத்துவதால் தரக்கிடங்குகளில் இருக்கும் தரவுகளின் தரம் உயர்ந்ததாக நம்பகமானதாக இருக்கின்றது.
  • மேம்பட்ட பாதுகாப்பு: தரவுக் கிடங்கில் இருக்கும் தரவு சேமித்துப் பின்னர் பயன்படுத்துவதற்கு மட்டுமே என்பதால் முதலில் “காண்பதற்கு மட்டும்” என்று கணினியில் சேமித்து யாரும்  மாற்ற முடியாதவாறு செய்கின்றோம். மேலும் அனைத்து தரவையும் ஒரே இடத்தில் குவித்து வைத்து தேவையானவர்களுக்கு தேவையான தரவுக்கு உண்டான அனுமதியை மட்டும் வழங்குவதால் பாதுகாப்பு எளிதாகின்றது.
  1. தற்போதைய மேக் கணிமைத் தொழில்நுட்பத்தில் சரியாக வடிவமைத்து விட்டால் மிகச் சிறிதான ஒரு கிடங்கிலிருந்து ஆரம்பித்து நிறுவனம் வளர வளர தரவுக் கிடங்கினையும் தேவைக்கேற்ப பெரிதாக்கிக் கொள்ள இயலும் என்பதால் குறைந்த செலவில் நிறைந்த பயனை அடைய முடியும்.

சற்றே கூர்ந்து கவனித்தால் எதையெல்லாம் குறையென்று சென்ற பகுதியில் குறிப்பிட்டோமோ அதையே நிறைகளாக இங்கே காண்கின்றோம். எனவே தரவுக் கிடங்கானது பூங்கொத்தாக மாறுவதும் குரங்கு கை பூமாலை ஆவதும் அதைத் திட்டமிட்டுப் பயன்படுத்துவோரின் கையில் உள்ளது என்தை அறிந்து கொள்ளலாம்!

தரவுச் சுரங்கம் - 20

ஓராண்டுத் தரவை மட்டும் ஆய்வு செய்யும் போது எந்தப் பெரிய குழப்பமும் நேர்வதில்லை. ஆனால், ஓராண்டுத் தரவை மட்டும் ஆய்வு செய்தால் ஒரு துணியின் தன்மையைப் பற்றி அறிந்து கொள்ள அதன் ஒரு நூலை மட்டும் எடுத்து அறிந்து கொள்ள முனைவது போலாகும். ஒரு துணியின் சீரான வடிவமைவும் பாங்கும் (Pattern), நிறங்களும் கோடுகளும் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமாயின் ஒரு நூலை மட்டும் வைத்து முடிவுக்கு வர முடியாது. ஓராயிரம் நூற்களை இணைத்துப் பார்த்தால் உடனே அறிந்து கொள்ள முடியும். இதே முறையில் தான் பெருந்தரவும்(Big data) இயங்குகின்றது. எனவே பல ஆண்டுகளாக இயங்கும் ஒரு நிறுவனம், அது துவங்கிய நாளில் இருந்து தன் வசம் இருக்கும் தரவைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் தரவுச்சுரங்கத்தின் அடிப்படையாகும்.

பிரபல நிகழ்நிலை அசைபட இணையத் தளமான யூடியூபில் எவ்வாறு அவரவர்களுக்கு இயைந்தவாறு அசைபடம் பரிந்துரைக்கப்படுகின்றது? கோடிக்கணக்கான மக்களின் விருப்பங்களையும் ஆராய்ந்து அவ்வாறு முடிவெடுக்க எத்தனை ஆய்வுகள் பின்னால் நடைபெற்றிருக்க வேண்டும்? இதற்கெல்லாம் தேவை ஒரு தரவுக்கிட்டங்கி (Data Warehose). அதில் தரமாக்கப்பட்ட தரவு (Standardized Data) சீராய் தேவைக்குத் தகுந்தவாறு அடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும். அது கோடிக்கணக்கான வரிகளைக் கொண்டு பல கணினிகளின் நினைவகங்களிலும் விரவி வைக்கப்பட்டிருக்கலாம். எனவே தான் அதைப் பெருந்தரவு என்று அழைக்கின்றோம். அதற்குண்டான வன்பொருள் (Hardware), மென்பொருள் (Software), முறைமை (Logic) அனைத்தும் தினந்தோறும் வளர்ந்து கொண்டே இருப்பதைக் கண்கூடாகக் காண முடிகின்றது. சாமான்னியர்களும் இந்தப் பெருந்தரவிலிருந்து தரவைத் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள ஏதுவாக பயன்பாட்டு நிரல் இடைமுகங்கள் (API – Application Program Interface) அனைத்து பிரபலமான சமூக ஊடகங்களுக்கும் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனத்தைப் பற்றி பேஸ்புக்கில் என்ன பேசுகின்றார்கள் என்பதை ஒரு சிறு பைத்தான் மொழி நூலகப் பொதியின் மூலம் நமது கணினிக்கு எளிதாக நிகழ்நிலையில் கொண்டு வரமுடியும்.

இவ்வாறு பெருந்தரவைத் தொகுக்கும் போது அல்லது உருவாக்கும் போது நமக்கு ஏற்படும் இடையூறுகளை இந்தப் பகுதியில் காண்போம்.

மெதுவாய் மாறும் பரிமாணங்கள்: (Slowly Changing Dimensions - SCD) தரவை ஆய்வு செய்வதற்கு அதை நான்கு அம்சங்களாகப் பிரித்து அதில் ஒன்று தான் பரிமாணம் என்று பார்த்தோம். அந்தப் பரிமாணம் தான் நிலையானது என்றும். தரவு ஒரு நடவடிக்கையின் செய்திகளைச் சேகரிப்பது என்றால், அதற்கு அர்த்தம் உண்டாக்குவது பரிமாணம் என்றும் பார்த்தோம். ஆனால், இப்பூவுலகில் எதுவும் நிரந்தரமன்று என்பதை நாம் உணர்வோம்! அது போல் பரிமாணங்கள் நிரந்தரமாக இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக இன்று சென்னையில் இருக்கும் நமது வாடிக்கையாளர், அடுத்த ஆண்டு மதுரையில் குடியேறிவிடலாம். அதனால் அவர் நமது வாடிக்கையாளராக இல்லாது போக மாட்டார். இப்போது அவர் தொடர்பான தரவை சென்னையில் சேர்ப்பதா, மதுரையில் சேர்ப்பதா எனும் குழப்பம் நேரிடுகின்றது அல்லவா? இதைத் தான் மெதுவாய் மாறும் பரிமாணங்கள் என்கின்றனர். இதைச் சரி செய்ய நிறைய வழிமுறைகள் உள்ளன. வகை 0 லிருந்து வகை 7 வரை புதியதாக பல முறைகள் இருக்கின்றன. அதைச் சரி செய்யவில்லை என்றால் நமது ஆய்வு முடிவுகள் சரியானதாக இருக்காது.

தரவு நகல்கள்: (Duplicate data) ஒரு நிறுவனத்தின் மேலாளர் ஒவ்வொருவரும் அவர்களுக்கேற்றவாறு தரவுக் கிட்டங்கியினை வடிவமைத்தோ அல்லது பயன்படுத்தவோ முயலும் போது இயல்பாகவே ஒரே தரவு பல நகல்கள் எடுக்கப்பட்டு நிறுவனத்தின் கணினியை ஆக்கிரமிப்பு செய்து கொள்கின்றது. அதுவும் ஏற்கனவே பெருந்தரவே ஒரு பிரச்னை தான். அதை நகல்கள் வேறு எடுத்தால்? சொல்லவே தேவையில்லை!

தேவையா இல்லையா?: (Redundant Data) ஒரு சமயத்தில் தேவை என்று நினைக்கும் ஒன்று இன்னொரு சமயத்தில் தேவையில்லாததாகத் தோன்றுவதைக் காண்கின்றோம். தேவையான தரவு என்று தேவையில்லாததைச் சேர்த்து வைத்தாலும் பிரச்னை தான். தேவையில்லாத தரவு என்று தேவையானதை ஒதுக்கி வைத்து விட்டாலும் பிரச்னை தான். எனவே தேவை அறிந்து தரவைத் தரமாக்கம் செய்தல் வேண்டும்.

செலவினம்: ஒரு தரவுக்கிட்டங்கியை உருவாக்கி அதை நிர்வகித்து அதிலிருந்து பலன் பெறுவது என்பது அதிகமான செலவாகும்.எந்த ஒரு முயற்சியிலும் பலன் அறிந்து, அந்தப் பலனானது செலவை விட அதிகமாக இருக்கின்றதா என்று அறிந்து முன்னெடுப்பது காலத்தின் கட்டாயமாகும்!

சிக்கல்: ஒரு பெரு நிறுவனத்தின் அத்தனை தரவையும் தரமாக்க முற்படுவது அத்தனை எளிதானதல்ல. பல சிக்கல்களை வழிவகுக்கும். அனைத்திற்கும் ஏற்றவாறு வளைந்து கொடுத்துக் கொண்டே இருந்தால் பிள்ளையார் பிடிக்கக் குரங்காகவும் மாறிவிடக்கூடும்.

நேரவிரையம்: ஏற்கனவே குறிப்பிட்டது தரவு பகுப்பாய்வு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அதற்கான பொறுமை மிகவும் முக்கியமாகும். அதே போன்று தான் தரவுக்கிட்டங்கியில் தரவை நேர்த்தியாக அடுக்கி வைப்பதற்கும் நேரமாகும்.

பொருந்தாத் தரவு: (Irrelevant Data) பல்லாண்டுத் தரவுகளைச் சேமித்து ஆய்வு செய்யும் போது மிகவும் பழமையான தரவு தேவைப்படாமலும் பொருந்தாலும் போகலாம். ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல’ என்பது தரவுத் தரமாக்கத்துக்கும் பொருந்தும்!

பாதுகாப்பு: ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்தத் தரவும் ஓரிடத்தில் சேர்த்து வைப்பதென்றால் அதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்னும் பிரச்னையும் உடனே வந்து விடுகின்றது. தேவையானவர்கள் மட்டுமே தேவையான தரவைப் பார்க்க முடியவேண்டும் என்பதும், தனியுரிமையைப் பேண வேண்டும் என்பதும் மிகப் பெரிய சவாலாக அமைகின்றது.

இவ்வாறு பல இடையூறுகள் வந்தாலும் தரவுக்கிடங்கின் நன்மைகளைக் கணக்கில் கொண்டால், தரவுக்கிடங்கின் மேன்மை நமக்குத் தெரியவரும். அதை அடுத்த பகுதியில் காண்போம்!

தரவுச் சுரங்கம் - 19

இத்தனை பாகங்களாக தரவுச்சுரங்கம் பற்றிய ஒரு நீண்ட அறிமுகத்தை வழங்கியிருக்கின்றோம். இனி சுரங்கம் தோண்டுவதற்கான பணியினை ஆரம்பிக்கலாம். ஒரு நிறுவனத்தில் தரவுகளின் பயன்பாடு கீழ்க்கண்ட இரண்டு வகைகளில் ஒன்றாக இருக்கின்றது.

  1. நிகழ்நிலை நடப்புச் செயல்முறை (Online Transaction Processing – OLTP)

நடவடிக்கைகள் நடந்தவுடன் நமக்குத் தேவைப்படும் அறிக்கைகளுக்காக இந்தச் செயல்முறை இருக்கின்றது. எடுத்துக்காட்டாக ஒரு வாடிக்கையாளர் சரக்கு வாங்கும் போது அவருக்குத் தருவதற்காக ஒரு பட்டி அல்லது ரசீது தரவேண்டியிருக்கின்றது. அதன் பின்னர் அதைக் கணக்குப் பதிவு செய்ய வேண்டியிருக்கின்றது. அன்றாடம் நமது நிறுவனம் செவ்வனே நடைபெறுவதற்காக இந்தச் செயல்முறை நடைமுறையில் இருக்கின்றது. இது உறவுமுறைத் தரவுத்தள மேலாண்மையைக் (Relational Database Management System) கொண்டு இயங்குகின்றது. உருபொருட்களை (Entities) மையப்படுத்தியும் அவற்றின் பண்புகளைச் (Attributes) சுற்றிலும் அமையுமாறு உள்ளது. இதற்கு நிரைகளை அடிப்படையாகக் கொண்டுஇயங்கும் உறவுமுறைத் தரவுத்தளம் (Row based Databases) பொருத்தமானதாக உள்ளது. அதாவது ஒரு ரசீதை நாம் அச்சிட வேண்டுமானால் நமக்கு வாடிக்கையாளரின் பெயர், முகவரி, வரிவிதிப்பு எண் என்று ஒட்டு மொத்தத் தரவும் தேவைப்படுகின்றது.

  • நிகழ்நிலை பகுப்பாய்வுச் செயல்முறை (Online Analytical Processing – OLAP)

நடவடிக்கைகள் நடந்து முடிந்தவுடன் எதிர்காலத் தேவைக்காக இரண்டாம் வகை தரவு வடிவமைப்பு அவசியமாகின்றது. ஏனெனில் பகுப்பாய்வு செய்வதற்கு நமக்கு ஒவ்வொரு வாடிக்கையாளரின் முகவரி, வரிவிதிப்பு எண் போன்ற துல்லியமான  தரவுகள் தேவைப்படாது. நடவடிக்கைகள் குறித்த செய்தித் தரவுகள் மட்டுமே தேவைப்படும். எனவே இங்கே செய்தியை (Facts) நடுவில் வைத்து உருபொருட்களைச் (Entities) சுற்றிலும் அமைக்கும் வழிமுறை தேவைப்படுகின்றது. இவ்வுருபொருட்களும் பின்னால் பரிமாணங்களில் (Dimensions) சிலவாக உருவெடுக்கும் விந்தையும் காணப் போகின்றோம்.

இரண்டு வகைகளுமே ஒரு நிறுவனம் செவ்வனே இயங்குவதற்குத் தேவை என்றாலும் அதே தரவையே அடிப்படையாகக் கொண்டு இரண்டுமே வடிவமைக்கப்படுகின்றது என்றாலும் அடிப்படையில் இவற்றுக்கிடையே மலைக்கும் மடுவுக்குமான  வேறுபாடுகளைக் காண முடிகின்றது. அவற்றை இங்கே பட்டியலிடுவோம்.

வ. எண்நிகழ்நிலை நடப்புச் செயல்முறை (OLTP)நிகழ்நிலை பகுப்பாய்வுச் செயல்முறை (OLAP)
1அன்றாட நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.எதிர்காலத் திட்டமிடலுக்கும் பகுப்பாய்வுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.
2அன்றாடத் தரவுகளை மட்டுமே பயன்படுத்துகின்றது.தேவைப்பட்டால் நிறுவனம் தொடங்கிய நாளில் இருந்து இன்று வரையான வரலாற்றுத் தரவுகளும் பயன்படுத்தப்படுகின்றது.
3அறிக்கைகளுக்குப் பொதுவாக தரவுத்தள மேலாண்மையைப் பயன்படுத்துகின்றது. (DBMS)அறிக்கைகளுக்கு தரவுக்கிட்டங்கிகள் தேவைப்படுகின்றன. (Data warehouses)
4இதன் தேவை அன்றாட மென்பொருள் பயன்பாட்டுக்கானதாகும். (Application Oriented)  தொழில் நடைமுறைக்குப் பயன்படுகின்றது.இது புலம் சார்ந்த மேலான (Subject Oriented) பயன்பாட்டுக்காகும். திட்டமிடல், முடிவெடுத்தல், பகுப்பாய்வு செய்தல் ஆகியவற்றுக்குப் பயன்படுகின்றது.  
5தரவுத் தள இயல்பாக்கம் (Database Normalization) அவசியமாகும்.இயல்பாக்கம் இருக்க வேண்டிய அவசியமில்லை.
6இன்றைய தொழிலின் நிலையை அறிய உதவும் ஒரு கண்ணாடி போன்றது..இது பல்பரிமாணத் தரவுப் பெட்டகமாகத் திகழ்கின்றது.
7எப்போதுமே 100 சதவீதத் தரவுகளைப் பயன்படுத்தப்போவதில்லை ஆதலால் மிகவும் வேகமாக இயங்கும்!அதிகப்படியான தரவுகளைப் பயன்படுத்துவதால் சற்று மெதுவாகவே இயங்கும். மணிக்கணக்கில் கூட ஆகலாம்!
8இதைப் பயன்படுத்துபவர்கள் நிறுவனத்தின் அடிமட்டப் பணியாளர்கள்.இதைப் பயன்படுத்துபவர்கள் திட்டமிடும் அளவில் இருக்கின்ற மேல்மட்டப் பணியாளர்கள்.
9தரவில் வாசித்தல் மற்றும் எழுதல் (Read and Write) ஆகிய இரு பணிகளும் அடிக்கடி நடக்கும்.இதில் எழுத வேண்டிய அவசியமில்லை. வாசித்தல் மட்டுமே நடைபெறும்.
10நிரைவரிசைத் தரவுகள் பொருத்தமானதாகும். (Row based Database)நெடுவரிசைத் தரவுகள் (Columnar Databases) பொருத்தமானதாகும்.
11உருபொருளை மையமாகக் கொண்டு, பண்புகளைச் சுற்றிலும் கொண்ட வடிவமைப்பில் இயங்குகின்றது. (Entity Centered.)நடவடிக்கைச் செய்திகளை மையமாகக் கொண்டு பரிமாணங்களைச் சுற்றிலும் கொண்ட வடிவமைப்பில் இயங்குகின்றது. (Fact Centered)
12இயல்பாக்கத்தினால் உருபொருள் உறவுமுறை வரைபடத்தின் மூலம் வரையப்படுகின்றது. (Entity Relationship Diagrams)எளிய நட்சத்திர வடிவமைப்பிலிருந்து பனித்துகள் வடிவமைப்பு மற்றும் சிக்கலான நட்சத்திரத் திரள் வடிவமைப்பு வரை நீண்டு கொண்டே செல்லக்கூடும். (Star/Snowflake/Cluster Schema)

மேற்கண்ட வேறுபாடுகளிலிருந்து நிகழ்தரவு பகுப்பாய்வின் சிறப்பம்சங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் பல ஆண்டுகளின் தரவுகளையும் சேர்க்கும் போது சில சிக்கல்களும் ஏற்படுகின்றன. அவைபற்றிய விளக்கங்களை அடுத்தடுத்த பகுதிகளில் காணலாம்.

தரவுச் சுரங்கம் - 18

சென்ற பகுதியில் தரவுப் பகுப்பாய்வு குறித்து விளக்கமாகக் கண்டோம். அடுத்ததாக பகுப்பாய்வின் வகைகளைக் குறித்து காண்போம். நோக்கங்கள், வழிமுறைகள், செயல்பாடுகள், அதற்கான கருவிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பகுப்பாய்வினைப் பலவகைகளாகப் பிரிக்கின்றார்கள்.

  • விளக்கப் பகுப்பாய்வு (Descriptive Analytics): இருக்கின்ற தரவிலிருந்து “அப்படி என்ன தான் நடந்திருக்கின்றது?” என்ற கேள்விக்கான விடை தேட முற்படுவது விளக்கப் பகுப்பாய்வாகும். இதற்கு முக்கியமாக அடிப்படை புள்ளியியல் அளவைகளும் சூத்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. எவ்வாறு ஒரு துணியைத் தைப்பதற்கு முன்னர் தையல் வல்லுநர் ஒருவரை அளந்து பார்த்துச் சில எண்களை மட்டும் குறித்துக் கொண்டு பின்னர் தேவையான நேரத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்கின்றாரோ அதே போல் நாமும் ஒட்டு மொத்தத் தரவிற்கும் சில எண்களைக் கண்டுபிடித்து அது குறித்து ஆராய முற்படுகின்றோம். அனைத்துத் தரவுகளையும் ஒரே நேரத்தில் அலசி ஆராய்வது என்பது கடற்கரையில் மணலை எண்ணுவது போல ஆகிவிடும். அது நம்மால் சாத்தியமாகாது. இந்தப் பகுப்பாய்வில் பயன்படுத்தப்படும் அளவைகள்:
    1. சராசரி (Average)
    2. முகடு (Mode)
    3. இடைநிலை (Median)
    4. கால்மானங்கள் (Quartiles)
    5. சதமானங்கள் (Percentiles)
    6. திட்டவிலக்கம் (Standard Deviation)
    7. சிறுமம் (Minimum)
    8. பெருமம் (Maximum)
    9. நிகழ்வெண் பரவல் (Frequency Distribution)
    10. கோட்டம் – கோணல் தன்மை (Skewness)
    11. முகட்டளவு – தட்டை அளவு (Kurtosis)
    12. தண்டு இலை படம் (Stem-Leaf picture)
    13. கட்ட வரைபடம் (Box Plot)
    14. அலைவெண் செவ்வகப்படம் (Histogram)

மேற்கண்ட அளவைகளுடன் மொத்தம், சதவீதம் போன்ற பல கணித சூத்திரங்களையும் பயன்படுத்துவதன் மூலம் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்று அறிந்து கொள்ள முடியும்.

  • பரிசோதனைப் பகுப்பாய்வு (Diagnostic Analytics) அடுத்த கட்டக் கேள்வியாக ஏன் நடக்கின்றது அல்லது எப்படி நடக்கின்றது என்று முன்னேறிச் செல்வது அடுத்த வகை பகுப்பாய்வு ஆகும். இதற்கும் சில புள்ளியியல் அளவைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் சில:
    • ஒட்டுறவு – காரணம் (Correlation – Causation)
    • கருதுகோள் (Hypothesis testing)
    • போக்குப் பகுப்பாய்வு (Trend Analysis)
    • தொடர்புப்போக்கு (Regression)
    • வேற்றுமைப் பகுப்பாய்வு (Analysis of Variance -ANOVA)
    • விகிதம் (Ratios)

இதன்மூலம் விளைவுகளையும் நடவடிக்கைகளையும் ஆராய்ந்து ஏன், எதனால் இப்படி நடக்கின்றது என்று கண்டுகொள்ளலாம். மேலும் தரவுகளுக்கு இடையேயான உறவுகளையும் கண்டறிய முடிகின்றது.

  • முன்கணிப்புப் பகுப்பாய்வு: (Predictive Analytics) இது வரை என்ன நடந்தது, ஏன் நடந்தது என்று கண்டோம். இனி முக்கியமாக அடுத்ததாக என்ன நடக்கும் என்று கணிப்பது தான் இந்தப் பகுப்பாய்வாகும்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய்

எனும் வள்ளுவர் குறளுக்கிணங்க அடுத்து என்ன வரப்போகின்றது என்று ஊகித்து அதற்கேற்றாற்போல் முடிவெடுக்க வல்லோர் வெற்றியை நோக்கிய பயணத்தின் அடுத்த கட்டத்தை எட்டுகின்றார்கள். இதில் பாங்கு கண்டறிதல் (Pattern Identification) முக்கியமானதாகும். பயன்படுத்தப்படும் புள்ளியியல் அளவைகள்:

முன்னறிவிப்பு/முன்கணிப்பு, (Forecasting)

இயல்பரவல் (Normal Distribution)

நிகழ்தகவு (Probability)

கணிச மட்டம் (Level of Significance)

நம்பிக்கை எல்லை/இடைவெளி (Confidence Limit/Interval)

  • வழிமொழி பகுப்பாய்வு (Prescriptive Analytics) இது ஒரு முக்கியமான பகுப்பாய்வாகும். இதில் அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்று வழிமொழிய முனைகின்றோம். இது பகுப்பாய்வின் உச்சகட்டம் எனலாம். என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே என்று இருந்து விட முடியாதல்லவா? நாம் அதற்கு என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுத்து அதன்படி நடக்கவேண்டும். யூடியூப், கூகுள் மேப் ஆகியவை அடுத்து நாம் எந்த அசைபடத்தைப் பார்க்கவேண்டும் என்றோ அடுத்து எந்த வழி திரும்பவேண்டுமென்றோ தானியங்கியாகச் சொல்ல என்ன மாதிரி பகுப்பாய்வை மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இதற்குப் பல மாதிரிகள் (Models), கணித/புள்ளியியல் சமன்பாடுகள், கோட்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. எக்செல் மென்பொருளில் இருக்கும் தீர்வியை (Solver) இங்கே குறிப்பிடலாம். செய்யறிவும் (AI), இயந்திரக்கற்றலும் (Machine Learning), ஆழக்கற்றலும் (Deep Learning) இதை நோக்கியே பயணிக்கின்றன.

தரவுச் சுரங்கம் - 17

              இன்று கணினித் தரவுச் சந்தையில் கோலோச்சியிருக்கும் தரவு பகுப்பாய்வின் பல வகைகளை இந்தப் பகுதியில் காண்போம்.  ஆங்கிலத்தில் இரண்டு சொற்களைக் காண்கின்றோம். Analysis – Analytics. இவையிரண்டு சொற்களும் ஒன்றுக்கொன்று மாற்றாகவோ அல்லது ஒன்றையொன்று வேறுபடுத்துவதாகவோ கையாளப்படுகின்றது. இரண்டும் ஒன்றே என்று பலரும், இரண்டும் வெவ்வேறே என்று பலரும் பல இணையதளங்களிலும் புத்தகங்களிலும் உரையாடுவதையும் விவாதம் செய்வதையும் காணமுடிகின்றது. வேறுபடுத்திப் பார்க்கும் பலரும் விவாதிக்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இவை:

  1. Analysis ஐ விட Analytics என்பது உயர்தரமானது.
  2. முதலாவது முடிந்ததும் இரண்டாவது ஆரம்பமாகின்றது.
  3. முதலாவது இறந்த காலத்தை ஆய்வு செய்வதாகவும், இரண்டாவது எதிர்காலத்தை ஊகிக்க வல்லதாகவும் உள்ளது.
  4. முதலாவது பொதுவானது. இரண்டாவது குறிப்பிட்ட வகையானது என்போரும் உள்ளனர்.
  5. முதலாவது குறிப்பிட்ட வகையானது, இரண்டாவது பொதுவானது என்போரும் உள்ளனர்!
  6. முதலாவது படைப்பு என்றால் இரண்டாவது அதைப் படைக்கும் கருவித் தொகுப்பு என்றும் சிலர் கூறுகின்றனர்.
  7. ஆங்கில அகராதியோ Analysis  என்பது தீர ஆய்வது (a detailed examination of anything complex in order to understand its nature or to determine its essential features : a thorough study) என்றும், Analytics என்பது (the method of logical analysis) அவ்வாறு ஆய்வதற்கான முறையான வழிமுறை என்றும் குறிப்பிடக் காண்கின்றோம்.

ஆக, ஒன்று மட்டும் நிச்சயமாகின்றது. இரண்டும் ஒன்றாகவே இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் இவை இரண்டையும் ஒன்றாய்ப் பார்ப்பதற்கான வாய்ப்பைக் கடந்து விட்டதாகவே நாம் கருதலாம். ஏனென்றால் கணினி உலகில் இவ்விரு சொற்களின் பயன்பாடும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகவே உள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் தரவுப் பகுப்பாய்வில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தைச் சுட்டிக் காட்டுவதாக Analytics என்ற சொல்லே பயன்படுத்தப்படுகின்றது. எனவே பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல எனும் சொல்லுக்கேற்ப நானும் இந்தத் தொடரில் இவ்விரண்டும் வேறெனக் கருதித் தொடர்கின்றேன்.

இரண்டுக்கும் முக்கிய வேறுபாடாகப் பலரும் குறிப்பிடுவது இவற்றில் பயன்படுத்தும் கருவிகளையும், முறைகளையும், பயன்பாடுகளையும் பற்றியதாகவே உள்ளது. எடுத்துக்காட்டாக Analyticsல் அதிகப்படியான புள்ளியியல் கோட்பாடுகளையும், கணித சூத்திரங்களைப் பயன்படுத்துவதும், பெருந்தரவில் உள்ளமைந்துள்ள பாங்குகளைக் கண்டறிந்து அதை எதிர்காலத்தில் எவ்வாறு பயன்படுத்தி வியாபார முடிவுகளை எடுக்க முடியும் என்பதையும் காண முடிகின்றது. கீழ்க்கண்ட படத்தைக் காணுங்கள். நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள். இணையத்தில் இது போன்ற வித்தியாசமான கருத்துள்ள பல்லாயிரக்கணக்கான படங்களைக் காண முடிகின்றது.

The Difference Between Business Analytics and Business Analysis

எதிலும் நமக்கென்று ஒரு கருத்தும் இருக்கும் அல்லவா? அதையும் இங்கே குறிப்பிடுகின்றேன். ஆனால் இது எனது தனிப்பட்ட சொந்தக் கருத்தாகும். என்னைப் பொருத்தவரை Analysis என்பது நாம் என்ன காண்கின்றோம் என்று அறிந்து அதைக் காண்பதாகும். Analytics என்பது நாம் என்ன காண்கின்றோம் என்பதை அறியாமல் அதைப் புதியதாகக் கண்டறிந்து வெளியிடுவதாகும்! அதாவது ஆய்வுக்கும் ஆராய்ச்சிக்கும் இருக்கும் வேறுபாடை நான் இவ்விரு சொற்களின் பயன்பாட்டின் மூலம் உணர முடிகின்றது. மற்றவர்கள் இதுவரை கண்டிராத ஒரு கண்ணோட்டத்தில் தரவைப் பயன்படுத்திக் கண்டறிந்து அதைச் சரியான நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்திப் பலரும் பயனடைவதே சிறப்பு. அதையே பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

கூகுள் நிறுவனம் தரவுப் பகுப்பாய்வின் படிநிலைகளை இவ்வாறு வரையறுக்கின்றது. சுருக்கமாக APPASA என்றும் அழைக்கப்படுகின்றது.

Ask - கேள்வி

Prepare - தயாரித்தல்

Process - தகவமைத்தல்

Analyze - பகுப்பாய்வு

Share - பகிர்வு

Act – செயல்பாடு

எந்த ஒரு விடையின் தராதரமும் கேள்வியின் தராதரத்தை ஒட்டியே இருக்கின்றது. ஒரு புத்திசாலித்தனமான கேள்விக்கு ஒரு புத்திசாலித்தனமான பதிலே விடையாகக் கிடைக்கக்கூடும். எனவே தகுந்த வித்தியாசமான கோணத்தில் கேள்வி கேட்பதில் ஆரம்பித்து, அதற்கான தரவுகளை எங்கெங்கு கிடைத்தாலும் அதனைப் பக்குவமாகச் சேகரித்து, பின்னர் நாம் ஏற்கனவே கண்ட பதப்படுத்தும் முறைகளைக் கொண்டு தகவமைத்து அதனை மீண்டும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி நாம் மட்டுமே மஞ்சள் கண்ணாடி கொண்டு உலகைக் காண்பது போல் காணாமல் மற்றவர்களுக்கும் அதைப் பகிர்ந்து அவர்களின் கருத்துகளையும் உள்வாங்கிப் பின் தேவையான முடிவுகளை எடுத்து அதைச் செயல்பாட்டில் சாதித்துக் காட்டுவதே கூகுளின் தரவுப் பகுப்பாய்வுப் படிநிலையின் உன்னதம் ஆகும். உலகின் முன்னணி நிறுவனமான கூகுளால் முடியுமென்றால் நம்மாலும் முடியும் தானே?