தரவுச் சுரங்கம் - 1

“சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

                தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!”

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

                தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்”

எனும் பாரதியின் கனவு மெய்ப்பட வேண்டும்.

                முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா எனும் கேள்வியை நாம் கேள்விப்பட்டிருப்போம். இதே போன்ற ஒரு கேள்வி எனக்குள்ளும் எழுவதுண்டு! நாம் கற்றதால் பகிர்கின்றோமா அல்லது பகிர்வதால் கற்கின்றோமா? மேற்கண்ட கேள்வியின் பதிலைத் தேடும் போது, உண்மையில் இரண்டுமே நடக்கின்றது என்பதே நான் உணர்ந்தது. எனவே கற்றதைப் பகிரவும், பகிர்ந்து கொண்டு கற்கவும் முயற்சிக்கும் ஒரு தொடராக இதை எழுத முனைகின்றேன். அறிவார்ந்த சமூகத்தின் ஆதரவும், வழிகாட்டுதலும் எப்போதும் போல வழங்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.

                மனிதன் குகையில் வாழ்ந்த காலத்தே தகவல் தொழில்நுட்பம் பிறந்தாலும், மனிதன் கணினியைக் கண்டுபிடித்ததன் பின்னர் அசுர வளர்ச்சியுற்று இருக்கின்றது என்பதை அனைவரும் அனுபவபூர்வமாக உணர்கின்றோம். இணையம் செயல்பாட்டுக்கு வந்து இணையம் 1.0, 2.0, 3.0, 4.0 என்று புதிய பதிப்புகள் அரங்கேறும் போதெல்லாம் தகவல் தொழில்நுட்பமும் தாவித்தாவிச் சிகரத்தை எட்டியிருக்கின்றது. எனினும் மனிதனின் ஐம்புலன்களில் இரு அவயங்களை மட்டுமே பயன்படுத்த முடிந்துள்ளது! அதிலும் முழுமை பெற்றிருக்கின்றோமா என்றால் இல்லை என்றே பதில் வருகின்றது. இன்னும் தகவல் தொழில்நுட்பம் வளர வேண்டிய எல்லை வானத்தை முட்டி நிற்கின்றது. இருப்பினும் இதற்கே நமக்கு மூச்சு முட்டி நிற்கின்றது.

                அதிலும் கடந்த பத்தாண்டுகளில் இத்துறை பெற்றிருக்கும் வளர்ச்சி பல்வேறு துறைகளையும் உலுப்பி எடுத்து வருகின்றது என்றால் அது மிகையாகாது. “எழுமின்! விழிமின்!” என்பது எதற்குப் பொருந்துமோ இல்லையோ இன்றைய தொழில் முனைவோர் அனைவருக்கும் இது பொருந்தும். இன்று எவரும் கணினித் தொழில்நுட்பம் நமது தொழிலை என்ன செய்து விடப் போகின்றது என்று வாளாயிருந்துவிட முடியாது. எத்தொழில் புரிவோரும் தமது தொழில் முன்னால் E என்னும் ஆங்கில எழுத்தினைச் சேர்த்துக் கொள்வதைக் கண்ணுறுகின்றோம். அந்த அளவிற்கு ஒவ்வொருவரின் தொழிலும் தகவல் தொழில்நுட்பம் கோலோச்சியிருக்கின்றது.

                தரவுச்சுரங்கம் எனும் இத்தொடரின் மூலம் “தரவு” பற்றி அடியேன் கற்றுணர்ந்ததைப் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். முதலில் தரவு என்றால் என்ன என்று பார்க்கலாம். தரவு பற்றிப் பார்க்க வேண்டுமாயின் நாம் தரவின் படிநிலைகளை உணர்ந்திருக்க வேண்டும்.

                நடப்பு (Transaction) + பதித்தல் (Recording) -> உண்மை (Fact)

                உண்மை (Fact) + தொகுத்தல் (Collection) -> தரவு (Data)

                தரவு (Data) + பதப்படுத்தல் (Processing) -> தகவல் (Information)

                தகவல் (Information) + ஆய்வு (Analyzing) -> அறிவு (Knowledge)

                அறிவு (Knowledge) + அனுபவம் (Experience) -> ஞானம் (Wisdom)

                செய்தி அல்லது உண்மை எனும் படிநிலையினின்று ஞானம் எனும் படிநிலைக்கு மனிதர்களை மட்டுமின்றி தகவல் தொழில்நுட்பத்தையும் கணினியையும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்பதே இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகின் தேவையாய் இருக்கின்றது.

                இன்றைய தொழில்முனைவோரின் தலைக்கு மேல் நான்கு கத்திகள் தொங்கிக் கொண்டு இருக்கின்றன. அதை ஆங்கிலத்தில் VUCA என்று அழைக்கின்றார்கள். நிலையின்மை, நிச்சயமின்மை, சிக்கல், குழப்பம் (Volatility, Uncertainty, Complexity, Ambiguity) ஆகியவை தான் அந்த நான்கு கத்திகள், இந்த நான்கு கத்திகளினின்று நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் மூன்று விதமான உத்திகளையும், கவசங்களையும், ஆயுதங்களையும் கையாள வேண்டியிருக்கின்றது.

                EEE, DDD, AAA என்று ஆங்கிலத்தில் இப்போது குறிப்பின்றார்கள்!

                EEE- உத்தி – சிக்கனம், திறமை, பயன்பாடு (Economy, Efficiency, Effectiveness) – நமது தொழிலைச் சிக்கனமாகவும், திறமையாகவும், மற்றவர்களுக்குப் பயனுள்ளதாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டியது இன்றைய தொழில் முனைவோருக்கு இன்றியமையாததாகின்றது.

                DDD - கவசம் – தரவு சார்ந்த முடிவெடுத்தல் (Data Driven Decision making)

                AAA - ஆயுதங்கள் – பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு, தானியக்கம் (Analytics, Artificial Intelligence, Automation) ஆகியவை நாம் அறிந்துணர்ந்து பயன்படுத்தி முன்னேறிச் சென்று வெல்ல ஆயுதங்களாகப் பயன்படுகின்றன.


Author: ரத்தினகிரி

ரத்தினகிரி சுப்பையா

-பட்டயக் கணக்காளர் - ஆசிரியர் - தரவு பகுப்பாய்வு ஆர்வலர்