சிலேடை வெண்பாக்கள்

இலக்கியத்தில் சிலேடை நயம் என்பது மிகவும் சிறப்பானதொன்றாகும். மொழியின் இனிமையையும், கவிஞனின் கற்பனையையும், ரசிப்போருக்கு ஆச்சரியத்தையும் காட்ட வல்லது சிலேடை என்றால் அது மிகையாகாது.

அதிலும் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத இரு விஷயங்களைத் தொடர்பு படுத்தி சிலேடை வெண்பாப் புனைவது என்பது ஒரு பெரிய கலை.

தமிழ்த்தாயின் பாதம் பரவி, முதன்முதல் தலைப்பாக,

கண்ணாடி மற்றும் செருப்பு இவற்றிற்கிடையே ஒரு சிலேடையுடன் ஆரம்பிப்போம்.

பாதரசம் பூசி வருமுச்சி காட்டும்நல்

மாதரசி கண்காண் பதவிபெறும் - மாதம்

பலவாய் வெளிக்காணச் சீரழியு மாடித்

தலங்காண் செருப்பும்நேர் காண்.

கண்ணாடி:

கண்ணாடியின் பின்னால் பாதரசம் பூசி வரும். வகிடெடுக்க உதவி செய்யும். தலைவியின் கண்களைத் தினம் காணும் புண்ணியம் பெறும். மாதம் பலவாக வெளிச்சம் பட்டிருந்தால் கண்ணாடி ரசம் போய்ச் சீரழிந்து விடும்.

செருப்பு:

செருப்பை அணிந்தால் பாதம் அழகாக மாறி விடும். மலைப் பயணத்தில் உச்சியை எளிதில் சென்றடைய உதவி செய்யும். தலைவி நகக்கண்ணைக் காணும் புண்ணியம் பெறும். மாதங்கள் பலவாக வெளியே சென்று வர தேய்ந்து விடும்.

இவ்வாறாக, கண்ணாடியும், ஊர்கள் பல காணும் செருப்பும் ஒன்றாகும்.


Related posts

Published by

ரத்தினகிரி

ரத்தினகிரி

ரத்தினகிரி சுப்பையா

-பட்டயக் கணக்காளர் - ஆசிரியர் - தரவு பகுப்பாய்வு ஆர்வலர்