தரவுச் சுரங்கம் - 21

தரவுச் சுரங்கத்தில் ஒரு முக்கியமான பங்கு தரவுக்கிடங்குக்கு உண்டு. அதனைப் பராமரிப்பதில் இருக்கும் சிக்கல்களை முந்தைய பகுதியில் பார்த்தோம். இப்போது அந்தத் தடைகளைத் தாண்டி அதைச் சரியாகப் பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகளைக் காண்போம். இந்த நன்மைகளைக் காணும் போது பல்லாண்டுகளாகக் கணினியைப் பயன்படுத்தி நிர்வகிக்கும் ஒவ்வொரு நிறுவனமும் தமக்கேற்ற தரவுக் கிடங்கைப் பராமரிப்பது அவசியம் என்பது புரியும்.

தரவுக் கிடங்கின் நன்மைகள்:

  1. தரவு சார்ந்த முடிவெடுத்தல் (Data Driven Decision Making): ஒரு தரவுக் கிடங்கு நிறுவனத்தின் அனைத்து தரவுகளுக்கும் ஒரே உண்மை மூலமாக செயல்படுகிறது, இது மேலாளர்கள் காண்பதற்கு ஏதுவாக வழக்கமான அறிக்கைகள் மற்றும் பார்வைகளை உருவாக்க உதவுகிறது. இது வணிகங்கள் தயாரிப்பு மேம்பாட்டிலிருந்து சந்தைப்படுத்தல் நுகர்வோரைச் சென்று சேர்வது வரை அனைத்திலும் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும்.
  • திறன் மேம்பாடு (Increased Efficiency): தரவு சேகரிப்பு, செயலாக்கம் மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள பல பணிகளை ஒரு தரவுக் கிடங்கு தானியக்கப்படுத்த முடியும். இது ஊழியர்களின் நேரத்தை மிகவும் சேமித்து அவர்களது நேரத்தை மேலும் சமயோசிதமான பணிகளில் கவனம் செலுத்த அனுமதிக்கும்.
  • குறைந்த செலவு: ஒரு தரவு கிடங்கு நிறுவனங்களுக்கு பல்வேறு வழிகளில் செலவைக் குறைக்க உதவும். எடுத்துக்காட்டாக, நிறுவனங்கள் திறனற்ற தன்மைகளை அடையாளம் காண்பதற்கும் அவற்றை நீக்குவதற்கும், அவற்றின் விநியோக சங்கிலிகளை மேம்படுத்துவதற்கும் உதவும்.
  • வாடிக்கையாளர் சேவை மேம்பாடு: வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை நன்கு புரிந்துகொள்ள ஒரு தரவுக் கிடங்கு நிறுவனங்களுக்கு உதவும். இது மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் சேவை மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கு வழிவகுக்கும். மீண்டும் மீண்டும் நம்மை நோக்கியே வருபவர் தானே வாடிக்கையாளர்? ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் பல்லாண்டுகள் தொடர்பை உருவாக்கி மேம்படுத்தி சிறந்த சேவையளிப்பதன் மூலம் வாடிக்கையாளரையும் லாபத்தையும் தக்க வைத்துக் கொள்ளலாம்.
  • சந்தைச் சவால்கள் சமாளிப்பு: மிகுந்த சவால் மிக்க சந்தை கொண்ட இன்றைய உலகில், சிறந்த முடிவுகளை விரைவாக எடுக்க உதவுவதன் மூலம் தரவுக் கிடங்கு நிறுவனங்களுக்கு முன்னோக்கிச் செல்ல வழிகாட்டியாக விளங்கும்.
  • இடர் மேலாண்மை: இன்றைய உலகில் ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து இருக்கின்றது. நமக்கான இக்கட்டு நிறுவனத்தின் உள்ளே, வெளியே என்று பல கோணங்களிலிருந்து ஏற்பட வாய்ப்பிருக்கின்றது. தரவுக் கிடங்கின் மூலம் ஒட்டு மொத்தத் தகவல்களையும் ஒரே இடத்தில் காண முடிவதால் பல கோணங்களிலும் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், நமக்கு சரக்கு மற்றும் சேவையளிப்போரைக் கண்காணித்து அறிந்து கொள்ள முடியும். இதனால் மோசடிகளை மிக விரைவில் கண்டறிந்து களவையும் கழிவையும் குறைக்க இயலும்.
  • ஆராய்ச்சியில் சிக்கனம்: எப்போதும் புதிய கண்டுபிடிப்புகளையே நாடி நிற்கும் நிறுவனங்கள் (எடுத்துக்காட்டு மருத்துவம், வாகன உற்பத்தி) தங்கள் ஆராய்ச்சிக்குச் செலவிடும் தொகையைக் குறைக்க இந்தத் தரவுக் கிடங்கிகள் உதவி புரிகின்றன. பெருந்தரவைப் பயன்படுத்துவதன் மூலம் தேவையற்ற செலவுகளைக் குறைக்கலாம்.
  • தரவின் தரம்: தரவென்றாலே அது தரப்படுத்தப்பட்டது என்று முன்பே அறிவோம். இருந்தாலும் அதை இன்னும் துப்புரவு செய்தால் இன்னும் பொலிவாகத் திகழும் அல்லவா? ஒரு சாதாரண பொருள் சேமிப்பு அறைக்கும் ஒரு பெரிய அறிவியல் சார்ந்த கிட்டங்கிக்கும் இருக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தை நாம் உணர வேண்டும். சாதாரண அறையில் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்க இயலும். ஆனால் ஒரு துறைமுகத்திலிருக்கும் ஆயிரக்கணக்கான கப்பல்களில் ஏற்றும் வகையில் பொருட்களை அடுக்கி வைக்க மூட்டைகள் காணாது அல்லவா? மிகப்பெரிய இரும்புக் கொள்கலன்களில் கொண்டு செல்வதைக் காண்கின்றோம். அதே போன்று தரவமைப்பிலும் செய்து தரப்படுத்துவதால் தரக்கிடங்குகளில் இருக்கும் தரவுகளின் தரம் உயர்ந்ததாக நம்பகமானதாக இருக்கின்றது.
  • மேம்பட்ட பாதுகாப்பு: தரவுக் கிடங்கில் இருக்கும் தரவு சேமித்துப் பின்னர் பயன்படுத்துவதற்கு மட்டுமே என்பதால் முதலில் “காண்பதற்கு மட்டும்” என்று கணினியில் சேமித்து யாரும்  மாற்ற முடியாதவாறு செய்கின்றோம். மேலும் அனைத்து தரவையும் ஒரே இடத்தில் குவித்து வைத்து தேவையானவர்களுக்கு தேவையான தரவுக்கு உண்டான அனுமதியை மட்டும் வழங்குவதால் பாதுகாப்பு எளிதாகின்றது.
  1. தற்போதைய மேக் கணிமைத் தொழில்நுட்பத்தில் சரியாக வடிவமைத்து விட்டால் மிகச் சிறிதான ஒரு கிடங்கிலிருந்து ஆரம்பித்து நிறுவனம் வளர வளர தரவுக் கிடங்கினையும் தேவைக்கேற்ப பெரிதாக்கிக் கொள்ள இயலும் என்பதால் குறைந்த செலவில் நிறைந்த பயனை அடைய முடியும்.

சற்றே கூர்ந்து கவனித்தால் எதையெல்லாம் குறையென்று சென்ற பகுதியில் குறிப்பிட்டோமோ அதையே நிறைகளாக இங்கே காண்கின்றோம். எனவே தரவுக் கிடங்கானது பூங்கொத்தாக மாறுவதும் குரங்கு கை பூமாலை ஆவதும் அதைத் திட்டமிட்டுப் பயன்படுத்துவோரின் கையில் உள்ளது என்தை அறிந்து கொள்ளலாம்!


Author: ரத்தினகிரி

ரத்தினகிரி சுப்பையா

-பட்டயக் கணக்காளர் - ஆசிரியர் - தரவு பகுப்பாய்வு ஆர்வலர்